Sausikala Feeling on Dinakaran brothers are investigation and jail
இதற்காகத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா? என்பதுபோல, இதற்காகத்தானா சிறைப்பட்டாய் சசிகலா? என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் சசிகலா.
யாரெல்லாம் வசதியாக வாழ வேண்டும் என்று, இத்தனை துன்பங்களை அனுபவிக்கிறேனோ, அவர்களெல்லாம் ஜெயில், கோர்ட், விசாரணை என்று ஆளுக்கொரு மூலையாக அலைக்கழிக்கழிக்க படுகிறார்கள் என்று வேதனையில் புழுவாய் நெளிகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் உள்ளனர்.
ஏற்கனவே அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அலைக்கழிக்கப்பட்டு வரும் தினகரன், இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே வழக்கு தொடர்பாக, தினகரனின் மனைவி அனுராதவை டெல்லி போலீசார் கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்த போது, தினகரன் கலங்கி விட்டார். எதுவாக இருந்தாலும் என்னிடமே கேளுங்கள், அவரை விட்டு விடுங்கள் என்று தினகரன் வேண்டுகோள் விடுத்தும், அதை போலீசார் ஏற்கவில்லை.
அவரை அங்கிருந்து வேறொரு அறைக்கு அப்புறப்படுத்திவிட்டு, அனுராதாவை போலீசார் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்க, அவர் மிகவும் நொந்து கண் கலங்க ஆரம்பித்து விட்டார்.
இதனிடையே, ஜெயா டி.வி ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கப்பட்டதில், அந்நிய செலாவணி விதிமுறைகள் மீறப்பட்டதாக, தொடரப்பட்ட வழக்கில், தினகரனின் சகோதரரும், மறைந்த மகாதேவனின் மைத்துனருமான பாஸ்கரன், எழும்பூர் நீதிமன்ற விசாரணையில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இளவரசியின் மகனான விவேக், தினகரனின் தங்கை ஸ்ரீ'யின் கணவரான ரிசர்வ் வாங்கி பாஸ்கரன், அனுராதாவின் சகோதரர் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை நோக்கி மத்திய அரசின் விசாரணை வளையம், வேகமாக நெருங்கி கொண்டிருப்பதாக, தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
எந்த உறவுகள் எல்லாம், வசதியாக, சுகமாக வாழ வேண்டும் என்று சசிகலா இவ்வளவு ஆண்டுகள், போயஸ் கார்டனிலேயே தமது, சொந்த வாழ்க்கையையே அடகு வைத்தாரோ, அந்த உறவுகளில் பலர், இன்று சிறையில், கோர்ட், விசாரணை என்ற பெயரில் நொந்து நூலாகி அவதிப்பட்டு வருகின்றனர்.
எஞ்சிய உறவுகளின் மீது இன்னும் என்னென்ன வழக்குகள் பாயுமோ, எந்தெந்த போலீசாரால் விசாரணை என்ற பெயரால் சிக்கி சீரழிவார்களோ, எந்தெந்த நீதிமன்றத்தால் அலைக்கழிக்க படுவார்களோ என்று சிறைக்குள்ளேயே கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறார் சசிகலா.
சசிகலா குடும்பத்து உறவுகளில், பெரிய அளவுக்கு மற்றவர்களுக்கு இடையூறு கொடுக்காதவர் தினகரன் மட்டுமே. அவர் பரிந்துரையின் பேரிலேயே, பலர் எம்.எல்.ஏ க்களாகவும், அமைச்சர்களாகவும் ஆயினர். பன்னீரை முதல்வராகியவரும் தினகரன்தான். ஆனால், இன்று தினகரன் அவஸ்தை படுவதற்கு முக்கிய காரணமே பன்னீர்தான் என்கின்றனர் அதிமுகவினர்.
அந்த குடும்பத்தில் மிகவும்முரட்டு தனமாக நடத்து கொள்பவர் மகாதேவன் மட்டுமே. ஆடிட்டர் ராஜசேகரன் என்பவரை நேரடியாக தாக்கியவரும் அவரே. ஆனால், இப்போது அவர் உயிருடன் இல்லை.
பாஸ்கரனும், திவாகரனும் ஓரளவு அதிரடி ஆசாமிகள் என்றாலும், தன்னுடன் இருப்பவர்களை எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இவர்களால் கட்சியில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீளமானது.
இவர்களுக்கெல்லாம், வழியையும், வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்த சசிகலாவால், அவமானப்பட்டு, பாதிக்கப்பட்டு, செல்வாக்கை இழந்து செல்லா காசாகி போன மூத்த கட்சி நிர்வாகிகள் ஏராளம். அவர்கள் கொடுத்த சாபமும் கொஞ்ச நஞ்சம் அல்ல.
ஜெயலலிதா இருந்த வரை சசிகலா பக்கம் ஏறுமுகமாக சுற்றிய கால சக்கரம், அவர் இறந்த பின்னர் எதிர் திசையில் சுற்ற ஆரம்பித்துள்ளது.
வினை விதைத்தவர் அதை அறுவடை செய்தே தீரவேண்டும். சசிகலா குடும்பத்திற்கு மட்டும் அது விதி விலக்கா என்ன?
