உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது... உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
மனுவில், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவை அறிவிக்கும் வரை, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது. சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்தாலும், ஒரே நேரத்தில்தான் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும். தேர்தலில் சமவாய்ப்பு என்ற நோக்கத்துக்கு இது மாறாக இருக்கும். எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை நிறுத்திவைக்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 77 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. இரண்டு கட்டங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் டிச. 28 அன்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவை அறிவிக்கும் வரை, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது. சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்தாலும், ஒரே நேரத்தில்தான் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும். தேர்தலில் சமவாய்ப்பு என்ற நோக்கத்துக்கு இது மாறாக இருக்கும். எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை நிறுத்திவைக்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல் முறையீட்டு மனுவில், “நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்தாமல் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை.