sasikala will not aajar in arumugasamy inquiry commission
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் சசிகலா நேரில் ஆஜராகமாட்டார் எனவும் அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜராவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணன், அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக், தீபாவின் கணவர் மாதவன், ஜெயலலிதாவின் உறவினர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ என்று தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதுதொடர்பாக விளக்கமளிக்க சசிகலா, அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இந்நிலையில், சசிகலா சிறையில் மௌன விரதம் இருந்துவருவதால், விசாரணை ஆணையத்தில் அவர் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நேரில் ஆஜராகி விளக்கமளிப்பார் எனவும் பிரமாண பத்திரங்களையும் அவரே தாக்கல் செய்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே ஒருவாரம் கழித்து கூடிய விசாரணை ஆணையத்தில், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.
