பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அடுத்த வாரத்தில் சசிகலா தரப்பில் தமிழக சிறைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட வேண்டும் என பாரதியஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சுதாகரன்,இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பெங்களூரு தனிநீதிமன்ற நீதிபதி டி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. அதன்படி, இந்த 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் உத்தரவையடுத்து, சசிகலா, இளவரசி இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர், சட்டமன்றத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து பாரதியஜனதா எம்.பி. சுப்பிரமணியசாமி டுவிட்டரில் ஆதரவு தெரிவித்து வந்தார்.

சசிகலாவே முதல்வராக வரவேண்டும், அவ்வாறு வரமுடியாவிட்டால், பெரும்பான்மை இருக்கும் சசிகலா ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவிஏற்க அழைப்பு விடுக்க வேண்டும் என டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், சுப்பிரமணிய சாமி டுவிட்டரில் நேற்று வெளியிட்ட கருத்தில், “ சசிகலா பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்ட இரு நாட்களுக்குப் பின், சசிகலா உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் காரணம் காட்டி அவரை தமிழக சிறைக்கு மாற்றக்கோரி சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவேண்டும்.

அதுமட்டுமல்லாமல், ஆளுநர் வித்தியாசகர் ராவ் யாருடைய நிர்பந்தத்துக்கும் பணியாமல், பழனிசாமியை முதல்வராக பதவி ஏற்க அழைப்பு விடுக்க வேண்டும்.

முதல்வராக பழனிசாமி பதவி ஏற்றபின், பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலா தமிழக சிறைக்கு மாற்றப்பட வேண்டும்.

நான் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் எதிராகவே பல வழக்குகளில் ஆஜராகி வாதாடி இருக்கிறேன். அப்படி இருக்கும் போது, இப்போது நான் பேசும் வார்த்தைகள், அவருக்கு நடுக்கத்தையும், அலறலையும் தருகிறதோ

ஜெயலலிதாவும், சசிகலாவும் ஆட்சியில் இருந்தபோது, நடுங்கிக் கொண்டும், பயந்தும், மறைந்து வாழ்ந்து வந்தவர்கள் இப்போது வெளியே நடமாட தொடங்கிவிட்டார்கள்.விரைவில் அவர்கள் பழைய இடத்துக்கே செல்வார்கள்” எனத் தெரிவித்தார்.