முடிவுக்கு வந்தது பரோல் …. இன்று மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார் சசிகலா !!!
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை சந்திக்க வந்த சசிகலாவின் பரோல் இன்று முடிவடைவதையடுத்து அவர் இன்று பெங்களுரு புறப்பட்டுச் செல்கிறார்.
சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த பிப்ரவரி மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
அண்மையில் அவரது கணவர், நடராஜனுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பார்ப்பதற்காக, பெங்களூரு சிறையில் இருந்தது சசிகலா, ஐந்து நாட்கள், பரோலில் வந்தார்.
சென்னை, தியாகராயநகரில் உள்ள, உறவினர் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியிருந்த சசிகலா அங்கிருந்து, நாள்தோறும் மருத்துவமனை சென்று, கணவரை பார்த்து வந்தார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வருவர் என, சசிகலா எதிர்பார்த்தார்; ஆனால், யாரும் வரவில்லை.
அவரது பரோல் விடுமுறை, இன்று நிறைவு பெறுகிறது. இன்று மாலை, 6:00 மணிக்குள் அவர், மீண்டும் சிறைக்குள் செல்ல வேண்டும். எனவே, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு, காரில் செல்ல திட்டமிட்டுள்ளார். 'அவரை வழியனுப்ப, திரளாக வாருங்கள்' என, தினகரன் ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று காலை கணவர் நடராஜனை சந்திப்பார் என்றும் பிறப்பகலில் அவர் பெங்களூரு புறப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.