ஈபிஎஸ் கோட்டைக்குள் செல்லும் சசிகலா...! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி...?
அதிமுக இணை ஓருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தை தனது கோட்டையாக வைத்திருக்கும் நிலையில் சேலம் மாவட்டத்திற்கு சசிகலா அடுத்த வாரம் செல்லவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அதிமுகவில் சசிகலா?
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே கிடைத்துள்ளது. எனவே இரட்டை தலைமையின் ஒருங்கிணைப்பு இல்லாதது தான் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. எனவே அதிமுகவின் தலைமையை சசிகலா ஏற்க வேண்டும் என அதிமுகவின் ஒரு பிரிவினர் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முக்கியமாக தென் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் அதிமுக- அமமுக பிரிந்து இருப்பதன் காரணமாகவே தோல்வி ஏற்படுவதாகவும் கூறி வருகின்றர். எனவே அதிமுக- அமமுக இணைக்க வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தான் தேனி மாவட்ட அதிமுக சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா அதிமுகவில் தலைமை பொறுப்பு கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கொடுத்தனர். இதன் காரணமாக அதிமுகவில் பெரிய அளவில் சசிகலா இணைப்பு தொடர்பாக குரல் எழும்பும் என பார்க்கப்பட்ட நிலையில் அனைவரும் அமைதியாகவே இருந்தனர்.
எடப்பாடி செல்லும் சசிகலா
இந்தநிலையில் சசிகலா தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்தும் கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாட்டிலும் ஈடுபட்டு வந்தார். அப்போதே ஏராளமான தொண்டர்கள் சசிகலாவிற்கு வரவேற்பு கொடுத்தனர். அதிமுகவின் பல்வேறு மாவட்ட முக்கிய நிர்வாகிகள் சசிகலாவை நேரில் சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர். இதன் அடுத்த கட்டமாக கொங்கு மண்டலத்தில் கோயில்களில் வழிபாடு நடத்தியும், தனது ஆதரவாளர்களை சந்திக்க சசிகலா திட்டமிட்டுள்ளார். கிருஷ்ணகிரியில் 31 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கும் சசிகலா, காட்டு வீர ஆஞ்சநேயர், தேன்கனிக்கோட்டை கால பைரவர் கோவில்களில் தரிசனம் செய்ய உள்ளார். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் மேச்சேரி பத்ரகாளியம்மன், எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில்களில் வழிபாட்டில் கலந்து கொள்கிறார். இதனையடுத்து இரவில் சேலத்தில் தங்கும் சசிகலா சேலம் மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சசிகலா தஞ்சாவூருக்கு பயணம் செய்திருந்த போது சேலம் மாவட்டத்தை சேர்ந்த எடப்பாடி சுரேஷ் தலைமையிலான குழு சசிகலாவை சந்தித்தது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தி வருகிறார். . இந்தநிலையில் சேலம் வரும் சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுக்க தொண்டர்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி
இதனையடுத்து கொங்கு மண்டலத்தின் தனது பயணத்தின் அடுத்த கட்டமாக ஏப்ரல் மாதம் 1-ந்தேதி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவில்களில் தரிசனம் செய்யும் அவர் திருப்பூர் வழியாக கோவை செல்கிறார். அங்கு ஈச்சனாரி விநாயகர் கோவிலில் தரிசனத்தோடு தனது கொங்கு மண்டல பயணத்தை நிறைவு செய்கிறார். ஏற்கனவே தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களை சசிகலா சந்தித்து வந்த நிலையில் தற்போது கொங்கு மண்டல ஆதரவாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.