திமுகவை ஒரு பிடிபிடித்த சசிகலா
இன்று புதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா தனதுபேச்சில் திமுகவை ஒரு பிடிபிடித்தார். இதை தொண்டர்கள் கைதட்டி வரவேற்றனர்.
அதிமுக பொதுச்செயலாளராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட சசிகலா இன்று பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். பின்னர் அவர் நீண்ட உரையை உருக்கமுடன்வாசித்தார்.
அப்போது ஜெயலலிதாவுக்கு பிறகு இநத இயக்கம் வலிமையாக இருக்க வேண்டுமென வலியுறுத்தினார். பேசிய அவர் பேச்சின் இறுதியில் திமுகவினரை ஒரு பிடி பிடித்தார்.
அவரது பேச்சில்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற இந்த இமயப் பேரியக்கத்தை கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் அப்பழுக்கில்லா கோடான கோடித் தொண்டர்கள். அவர்களின் உழைப்பு தான் இந்த இயக்கத்தின் உயிர் நாடி என்பதை உணர்ந்து, கழகத்தின் தொண்டர்களை நாம் கண் இமையாகக் காப்போம். தமிழக மக்களால் ஆராதிக்கப்படுகிற கழக அரசின் மீதான மக்களின் அன்பில் குன்றுமணி அளவுக்கும் குறை வராது பாதுகாப்போம்.
நம் கருணைத் தாயின் மறைவில், அந்த சரித்திரத்தின் நிறைவில், கழகத்தை வீழ்த்திடலாம் என்று கணக்குப் போட்ட சூதுமதியாளர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து, தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று, நேர் வழி சென்றால், நாளை நமதே, என்ற மக்கள் திலகத்தின் வாய் மொழியையே, நாம் எந்நாளும் தாய்மொழியாக ஏற்போம்.