sasikala should not nominate in election - election commission in supreme court

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு அவர்களது ஆயுட் காலம் முழுவதும் தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடைமுறைகளில் என்னென்ன சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் லிங்டோ, பொது நலன் அறக்கட்டளை என்ற என்.ஜி.ஓ., சார்பிலும் இதேபோன்ற வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. 

தற்போது ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தடை உள்ளது. இதை கடுமையாக்கி ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என அவர்கள் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பல்வேறு பரிந்துரைகளை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

அதன்படி ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு ஆயுட் காலம் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பரிந்துரைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஆய்வு செய்த வருகிறது.

இந்த பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தற்போது பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வாழ்நாள் முழுவதும தேர்தலில் போட்டியிட முடியாத நிலையே ஏற்படும். 

தற்போதுள்ள சட்டப்படி நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6 ஆண்டுகள் தடை என 10 ஆண்டுகள் கழித்து அவர் தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது அதற்கும் ஆப்பு வைக்கும் வேலையில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.