சசிகலா சொல்வது ரொம்ப ஓவர்... அடித்துச் சொல்லும் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர்..!
சசிகலாவை மீடியேட்டராக பயன்படுத்தும் அளவுக்கு, எம்.ஜி.ஆருக்கு சசிகலாவை தெரியாது.
அ.தி.மு.க., தொண்டர்களுடன் தினமும் போனில் பேசி வரும் சசிகலா, 'நான் எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறியுள்ளேன். எம்.ஜி.ஆர்., என்னிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் ' என்ற, புது தகவலை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆருக்கே சசிகால ஆலோசனை கூறினாரா என பலரும் விவாதித்து வருகின்றனர். இதுகுறித்து எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த ஹெச்.வி.ஹண்டே கருத்து தெரிவித்துள்ளார். ‘’கடந்த, 1980ம் ஆண்டுகளில், எம்.ஜி. ஆரோடு மிக நெருக்கமாக இருந்தவன் நான். அ.தி.மு.க.,வின் துணைப் பொதுச் செயலராகவும் இருந்தேன். அந்த காலகட்டத்தில் தான், ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார். ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்தில் இருந்து, நடராஜனும், சசிகலாவும், ஜெயலலிதாவுக்கு உதவிகள் செய்து வந்தனர். நடராஜன், அரசியல் ரீதியாக ஆலோசனைகளும் கூறி வந்தார். இருவரும், ஜெயலலிதா வீட்டில் இருந்து, அவருக்குத் தான் உதவி செய்தனரே தவிர, எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இல்லை.
அப்படி இருந்தால், 'புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., மறுபிறவி எடுத்த வரலாறு' என்ற, என் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பேன். எம்.ஜி.ஆர்., இறந்து விட்டார் என்பதற்காக, 'அவர் என்னுடன் ஆலோசித்திருக்கிறார்' என்று, சசிகலா கூறுவது கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. அதேபோல, சசிகலாவை மீடியேட்டராக பயன்படுத்தும் அளவுக்கு, எம்.ஜி.ஆருக்கு சசிகலாவை தெரியாது. வலம்புரிஜானை பொறுத்தவரை, சுவாரஸ்யத்துக்காக சிலவற்றை புனைந்து எழுதுவார் அப்படித்தான், இந்த விஷயமும் இருக்க வேண்டும்’’என அவர் கூறினார்.