சின்னம்மா ரிட்டர்ன்ஸ் !! ஜெயலலிதா பிறந்தநாளில் 'சசிகலா' போட்ட பிளான்.. ஸ்கெட்ச் EPSக்கு தானா..?
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது.
அப்போது தி.நகரில் உள்ள வித்யோதயா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் சசிகலா தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, 'அக்கா இல்லாமல் முதல் முறையாக வாக்களிக்கிறேன். வரும் போதே நினைத்துக்கொண்டேதான் வந்தேன். நான் என் அக்காவுடன் சேர்ந்துதான் வாக்களித்து இருக்கிறேன். இப்போது தனியாக வந்து வாக்களித்துள்ளேன்' என்று கூறி கண் கலங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் போயஸ்கார்டனில் இருந்த சசிகலா, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களிப்பார். எப்போது வாக்களித்தாலும் ஜெயலலிதா உடன் வந்துதான் வாக்களிப்பார். 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது கடைசியாக ஜெயலலிதாவும் சசிகலாவும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்குகளை பதிவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சசிகலா எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புது ஸ்கெட்ச் ஒன்றை போட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வெளியே வந்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் எவ்வளவு தூரம் சசிகலா முன்னேறியிருக்கிறார் என்று கேட்டால் பெரிய கேள்விக் குறியே மிஞ்சியது.
அதிமுகவில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகள், சசிகலா குடும்பத்தால் ஆதாயம் பெற்றவர்கள் என பலரை தன் பக்கம் இழுத்து அதன் மூலம் அதிமுக இரட்டைத் தலைமைக்கு அதிர்ச்சியளிக்கலாம் என சசிகலா திட்டமிட்டார். அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தங்களது பதவிகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டி சசிகலாவை நோக்கி அவர் பட்டியலிட்டு வைத்த நிர்வாகிகள் வரவில்லை.
இதனால் அதிமுகவின் இரட்டை தலைமை குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அசைந்து கொடுக்கவே இல்லை. இந்த வழியில் பயணம் செய்தால் கட்டாயம் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை எந்த பலனும் இருக்காது என்பதை உணர்ந்த சசிகலா தனது பாணியை மாற்றியுள்ளார் என்று கிசுகிசுக்கின்றனர். பாஜக தலைமையில் இருந்து வந்த சிக்னல் தான் இதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.
சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வருவது மட்டுமல்லாமல் அவரது தலைமையில் இணைப்பை நிகழ்த்த விஜயசாந்தி மூலம் தகவல் சென்றுள்ளது. அதிமுகவின் சமீபத்திய பல சறுக்கல்களுக்கான காரணம், இணைப்பின் மூலம் என்னென்ன நன்மைகள் பாஜகவுக்கு ஏற்படும், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்து அதன் மூலம் கணிசமான இடங்களை எப்படி பெறுவது என்பது குறித்து விஜயசாந்தி டெல்லிக்கு சொல்லியுள்ளதாக கூறுகிறார்கள்.
பெங்களூர் சிறை வழக்கு ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் விஜயசாந்தி மூலம் முக்கிய தகவல்கள் பரிமாறப்பட்டதால் சசிகலா ஹேப்பி மூடில் இருப்பதாக சொல்கிறார்கள். வரும் 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிறது. அதிமுகவினருக்கு மிக முக்கிய நாள் இது.
இந்த பிறந்த நாளினை, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் விமர்சியாக கொண்டாடவிருக்கிறார்கள். அன்றைய தினமாவது ஏதாவது அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக சசிகலா அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அல்லது அதிமுக அலுவலகத்திற்கு செல்ல திட்டமிட்டிருப்பாரா? என்ற சந்தேகமும் எழுகிறது..
காரணம், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் சில நிமிடங்கள் தியானம் செய்தது மிகப்பெரிய கவனம் பெற்ற நிலையில், அதேபோன்ற அஸ்திரத்தை சசிகலாவும் எடுக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. பாஜகவில் இருந்து வந்த கிரீன் சிக்னலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு எடப்பாடிக்கு பாதகமாகவும் இருக்கும் என்று நினைக்கும் சசிகலா, தனது அஸ்திரத்தை எடுப்பார் என்று அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.