sasikala only knows jayalalithas death probe says vaiko in pudukottai

ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் ஒவ்வொருவரும் வேறு வேறு விதமாகக் கூறி வருகின்றனர். ஜெயலலிதாவுடன் கூடவே இருந்த சசிகலாவுக்கே அந்த ரகசியம் தெரியும் என்று கூறியுள்ளார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில கலந்து கொள்வதற்காக வைகோ புதுக்கோட்டைக்கு வந்தார். அவரிடம் செய்தியாளர்கள் பேசினர். அப்போது, ஜெயலலிதா மரண விவகாரத்தில் எழுந்துள்ள புதிய சர்ச்சைகள் குறித்தும், ரஜினி, கமல் அரசியல் குறித்தும் சில கேள்விகளைக் கேட்டனர். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் வைகோ. 

ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை நிலவுவது பற்றி கருத்து கூறிய வைகோ, ஜெயலலிதாவின் இறப்பு குறித்து திவாகரன் காலையில் ஒன்று பேசுகிறார், மாலையில் ஒன்று பேசுகிறார். ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் அநாகரீகமாகப் பேசி வருகிறார். இருந்தபோதும், 24 மணி நேரமும் ஜெயலலிதாவோடு இருந்தவர் சசிகலா மட்டும்தான். எனவே அவருக்குத்தான் ஜெயலலிதாவின் மரணத்தில் அனைத்து உண்மைகளும் தெரியும். இதுகுறித்து அவர்தான் பதிலளிக்க இயலும் என்று கூறினார் வைகோ. 

ரஜினி அரசியல் களம் வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த போது, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நான் 54 ஆண்டுகளாக அரசியலில் இருந்தும் கோடிக் கணக்கான மக்களை சந்தித்துள்ளேன். ஆனால் தற்போது மாற்றத்தை கொண்டு வருவேன் என்று ரஜினி, கமல் கூறி அரசியலுக்கு வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வந்து பார்த்தால்தான் அதனுடைய இயல்பு குறித்து அவருக்குப் புரியும். அவர்களின் இருவரது வெற்றி குறித்து காலம் தான் பதில் சொல்லும் என்றார்.

ஹஜ் புனித யாத்திரைக்கு மானியத்தை ரத்து செய்துள்ள மத்திய அரசு இஸ்லாமியர்களின் உணர்வைப் புறம் தள்ளியுள்ளது. ஏற்கெனவே முத்தலாக் விவகாரத்திலும் சரி, தற்போது ஹஜ் புனித பயண மானிய ரத்து விவகாரத்திலும் சரி இஸ்லாமிய தலைவர்களோடு கலந்து ஆலோசிக்காமல் அதனைச் செய்துள்ளது கண்டிக்கத் தக்கது. இதற்கு மாற்று ஏற்பாடை மத்திய அரசு செய்திருக்க வேண்டும் என்று கூறினார் வைகோ.

ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலாவுக்கே அனைத்தும் தெரியும் என்ற நிலையில்தான், இது குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியது. அதற்கு சசிகலா, தன் பெயரை யார் குறிப்பிடுகிறார்களோ அவர்களின் பெயர்களைச் சொல்லி பட்டியலை அளித்தால், அதனை பரிசீலித்து பதில் அளிப்பதாக, வாய்தா வாங்கி காலம் கடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.