sasikala not interested to extending parole
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து, உடல் நலம் குன்றி சிகிச்சையில் இருந்த தனது கணவர் நடராஜனைப் பார்க்க பரோலில் வெளியே வந்தார் சசிகலா. அவருக்கு 5 நாள் பரோல் அளித்து சென்னை செல்ல அனுமதி அளித்தது கர்நாடக சிறைத்துறை.
சசிகலா பரோலுக்கு விண்ணப்பித்திருந்த நேரத்தில், எம்.நடராஜனுக்கு சிறுநீரகம், கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற சூழல் இருந்தது. அதனால், தமிழக காவல் துறையும் ஒப்புதல் அளித்தது. இதை அடுத்து பரோலில் வெளிவந்தார் சசிகலா. அப்போது, அவருக்கு பலவிதமான கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. உடல் நலம் குன்றியிருந்த கணவர் நடராஜனை மருத்துவமனைக்குச் சென்று பார்க்கவும், குறிப்பிட்ட உறவினர் வீட்டில் தங்கவும்தான் அனுமதி அளித்தது. மேலும், அரசியல் ரீதியாக எவரும் வந்து சந்திக்கவும், அரசியல் நடவடிக்கைகளில் சசிகலா ஈடுபடுவதற்கு தடை விதித்தும் என, பல கட்டுப்பாடுகளுடன் பரோல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கட்சி ரீதியான சில நடவடிக்கைகளில் அவர் ரகசியமாக ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவ்வாறு தெரியவந்தால், சசிகலாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அவ்வாறு யாரையும் அவர் சந்திக்கவில்லை என்று அரசுத் தரப்பில் இருந்தும் அமைச்சர்களின் பேட்டிகளில் தெரியப் படுத்தப்படுகிறது. ஆனால், கணவரின் உடல் நிலையை முன்வைத்து பரோல் பெற்று, தமிழகத்தில் தம் கையை மீறிப் போய்விட்ட கட்சி, ஆட்சியின் குழப்ப நிலையை சரிக்கட்ட சில நடவடிக்கைகளை எடுக்க நினைத்தார் சசிகலா. அது தற்போது ஓரளவு நிறைவேறியதாகவே கூறப்படுகிறது.
இந்நிலையில், சசிகலா பரோல் நீட்டிப்பு கேட்கவில்லை என்றும் நாளை மாலைக்குள் மீண்டும் சிறைக்குத் திரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
