அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள்,எம்.பிக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் தங்களது பதவிகளைக் காப்பற்றிக் கொள்ள சசிகலாவை ஆதரிக்கிறார்கள் என பலவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் சசிகலாவின் தலைமையை ஏற்க முடியாமல் அதிமுக வின் நட்சத்திர பேச்சாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். தன்னுடைய அதிரடி பேச்சால் ஜெயலலிதாவையே கவர்ந்திழுத்த நடிகை விந்தியா இதற்கு பிள்ளையார் சுழி போட்டார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ஆனந்தராஜ், கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். ஜெயலலிதாவைப் புகழ்ந்த வாயால் சசிகலாவை பற்றி பேசமுடியாது என அறிவித்துவிட்டு அக்கட்சிக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

இதனிடையே அதிமுகவின் கொள்கைப்பரப்பு துணைச் செயலாளராகவும், நட்சத்திர பேச்சாளராவும் இருந்த நாஞ்சில் சம்பத் அதிமுக வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதிமுக வின் பொதுச் செயலாளராவதற்கு சசிகலாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை என அறிவித்துவிட்டு கழகத்திற்கு கல்தா கொடுத்தார்.

இந்நிலையில் அதிமுகவின் முதல்நிலை பேச்சாளரான ஜெயவேல் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டு, பின் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு கட்சியில் இணைந்த சசிகலாவை பதவியிலிருப்போர் தங்களது சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஆதரிக்கலாம் ஆனால் அடிமட்டத் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் இரட்டை இலைச் சின்னத்தை மட்டும் விட்டுவிட்டு செல்லவில்லை, சின்னம்மாவையும் விட்டச் சென்றார் என ? பண்ருட்டி ராமச்சந்திரன் கூறிய பிறகுதான் எம்.ஜிஆருக்கு ஒரு சின்னம்மா இருப்பதையே தெரிந்து கொண்டோம் என அவருக்கு குட்டு வைத்துள்ளார்.

முதலமைச்சர் என்ற நிலை மறந்து சசிகலா காலில் விழுந்த ஓபிஎஸ் போன்றவர்களை மக்கள் ஒரு போதும் மன்னனிக்க மாட்டார்கள் என்றும் எனவே அதிமுக வில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.