திமுகவை எதிர்க்க சசிகலா தேவை... அதிமுகவுக்கு திடீர் யோசனை கூறிய குருமூர்த்தி..!
திமுகவை எதிர்க்க வேண்டுமென்றால் சசிகலா போன்றவர்களையும் அதிமுகவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி யோசனை தெரிவித்துள்ளார்.
துக்ளக் வார இதழின் 51-வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா கலந்து கொண்டார். விழாவில் ஆடிட்டரும் துக்ளக் வார இதழின் ஆசிரியருமான குருமூர்த்தி பேசினார். “தமிழகத்தில் யார் தேசியத்தை விரும்புகிறார்களோ அவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க விரும்பும் சூழல் உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுமை உள்ளது. அது வெளிப்பட தொடங்கியிருக்கிறது.
தமிழகத்தில் சாதி கட்சிகள் உருவாக திராவிடமே காரணம். குறிப்பாக பிராமண எதிர்ப்புதான் ஜாதி கட்சி உருவாகவே காரணம். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சியை அடையும். திமுகவை எதிர்க்க வேண்டுமென்றால் சசிகலா போன்றவர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும்.” என்று குருமூர்த்தி பேசினார்.