சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தத் தவறினால், கூடுதலாக 13 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியது இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு விசாரணை நீதிமன்றம் விதித்த, தலா 4 ஆண்டுகள் சிறையும், ரூ.10 கோடி அபராதம் ஆகியவற்றை உறுதி செய்தது.

இந்நிலையில், பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவரிடம், சசிகலா உள்ளிட்ட 3 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமான ரூ.10 கோடியை செலுத்த தவறினால் என்ன ஆகும் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “ உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.10 கோடி அபராதத்தை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால் கூடுதலாக 13 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியது இருக்கும்.

ஏற்கனவே சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 21 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். ஆதலால், இப்போது, 3 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறையில் அவர்கள் இருக்க வேண்டியது இருக்கும்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற இந்த 3 பேருக்கும் சிறையில் ஒரேமாதிரியான வசதிகள் தரப்பட்டது. ஆனால், சசிகலா, இளவரசி மட்டுமே முதல் தர வசதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

தொலைக்காட்சி ஏதேனும் பார்க்க வேண்டுமானால் கூட, பொது இடத்துக்கு வந்துதான் பார்க்கின்றனர். சிறையில் உள்ள மருத்துவர்கள், அவர்களுக்கு வழக்கமான பரிசோதனைகளை நாள்தோறும் செய்து வருகிறார்'' என்றார்.