முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, மனுதாரர்கள் பேரையும் விடுதலை செய்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தி.மு.க. மற்றும் கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. 

நீதிபதீகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டனர். 

இதையொட்டி சசிகலா தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் , தன்னால் தற்போது நீதிமன்றத்தில் சரண் அடைய முடியாததால் 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இன்று இந்த மனு விசாரணைக் வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, அவகாசம் தரமுடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

மேலும், சசிகலாவுக்கு வழங்கிய தீர்ப்பின் நகல், கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டது. இதனால், இன்று மாலைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் 28வது அறையில், நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், போயஸ் கார்டனில் இருந்து காரில் புறப்பட்ட சசிகலா, முன்னதாக அங்குள்ள ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு ஜெயலலிதாவின் சமாதியை முன்று முறை சுற்றி வலம் வந்த அவர், திடீரென ஆவேசமடைந்து 3 முறை சமாதியின் மீது அடித்து சத்தியம் செய்தார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சசிகலா, சென்னையில் இருந்து ஓசூர் வரை தமிழக போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்கின்றனர். இதற்காக 2வாகனங்களில் தமிழகக் காவல்துறையின் அதிரடிப் படையினர் உடன் செல்கின்றனர். ஓசூரில் இருந்து பெங்களூர் வரை கர்நாடகபோலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள் என கூறப்படுகிறது.