சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியில், சசிகலா செற்றி பெறுவாரா அல்லது ஓபிஎஸ் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சசிகலா அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான கடிதத்தை கவர்னர் வித்யா சாகர் ராவிடம் அவர் ஒப்படைத்தார்.அதே நேரத்தில் ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதால் ஆளுநர் எந்தபிதமான முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்நிலையில் தில்லியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் எம். எல்.ஷர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நலமனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.

அதில் தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவுகிறது. ஆளும்கட்சியான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி தங்கள் சட்டமன்ற கட்சித்தலைவராக சசிகலாவைத் தேர்வு செய்துள்ளனர்.
இது தொடர்பான கடிதமும் மாநிலத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரை இன்னும் ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார். இதன் மூலம் தமிழகத்தில் நிச்சயமற்ற அரசியல் சூழல் நிலவுகிறது.

எனவே 24 மணி நேரத்திற்குள் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
