வைத்தியலிங்கத்தை அமமுகவுக்கு சாக்லெட் கொடுத்து கூப்பிடுகிறார் சசிகலா... பங்கமாய் கலாய்த்த ஜெயக்குமார்.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை அமமுகவுக்கு வரச்சொல்லி சசிகலா அவருக்கு சாக்லேட் கொடுத்து வரவேற்றுள்ளார் என ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை அமமுகவுக்கு வரச்சொல்லி சசிகலா அவருக்கு சாக்லேட் கொடுத்து வரவேற்றுள்ளார் என ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். தனது பிறந்த நாளான இன்று வரும் வழியில் சசிகலாவை சந்தித்த வைத்தியலிங்கம் அவரிடம் ஆசி பெற்றுள்ள நிலையில் அதை ஜெயக்குமார் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று புகார் அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் திருக்கோயிலாக இருக்கக்கூடியது அதிமுக தலைமை அலுவலகம், அதை பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரவுடிகளுடன் வந்து சூறையாடினர். இதேபோல ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் ஜெசிடி பிரபாகரன் உள்ளிட்டோர் ஓபிஎஸ் தலைமை அலுவலகம் வர பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் மனு அளித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: நீட் தேர்ச்சி குறைய இவரே காரணம்... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!!
அதிமுக உறுப்பினர் அல்லாத ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என டிஜிபியிடம் வலியுறுத்தியுள்ளேன், ஏற்கனவே கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடிவிட்டு ஐபிசி 145 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒருவரை எப்படி கட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்க முடியும்? எனவே பன்னீர்செல்வத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் அனுமதிக்கக்கூடாது என முதல்வரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் குறிப்பிட்டுள்ளேன், இதேபோல சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்படும் என்றார்.
இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் வரும்போது 50000 தொண்டர்கள்... இபிஎஸ்சை டரியில் ஆக்கிய கிருஷ்ணமூர்த்தி.
அப்போது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் தொடர்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது ஒரு சிவில் சார்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது, அப்படியெனில் பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியதும் செல்லும்தானே என்றார். கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஓபிஎஸ் எப்படி லெட்டர் பேட், அதிமுக கொடியை பயன்படுத்த முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தன்னுடைய நண்பர் வைத்திய லிங்கத்திற்கு அதிமுகவில் எந்த வேலையும் இல்லை எனவே அமமுகவுக்கு வரும்படி சசிகலா அவருக்கு சாக்லேட் கொடுத்து கூப்பிட்டுள்ளார், அதிமுகவின் உண்மையான தொண்டன் எவனும், அதிமுகவை தாண்டி வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டான், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாருமே திமுகவுடன் பேசக்கூட மாட்டார்கள் என்றார். திமுகவுடன் ஓபிஎஸ் கைகோர்த்து விட்டார், ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என்றார். ஆர்.எஸ் பாரதி ரீல் சுற்றும் பாரதி எனக் கூறிய அவர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அவர் இன்டர்நெட்டில் இருந்து எடுத்து வெளியிடுவார் போல என கிண்டலடித்தார்.