அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சி.. அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.. எடப்பாடி பழனிசாமி அதிரடி.!
கிரக பிரவேச நிகழ்ச்சி நடப்பதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கிரக பிரவேச நிகழ்ச்சி நடப்பதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. நல்ல நாள் என்பதால், சென்னையில் இன்று அவர் புதிய வீட்டில் குடியேறுகிறார். இதற்காக கிரக பிரவேச நிகழ்ச்சி நடப்பதால், அவர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நல்ல நாள் என்பதால், நான் வந்துள்ளேன். நாங்கள் ஆட்சியில் இருந்த போது, அரசு மீதான விமர்சனத்திற்கு நான் பதிலளிப்பேன். பொதுவான விஷயத்திற்கு பன்னீர்செல்வம் பதில் அளிப்பார். ஜெயலலிதா இருந்த போது நிர்வாகிகள் பெயரில் அறிக்கை வந்துள்ளது.
அப்போது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. தற்போது பரபரப்புக்காகவும், தலைப்பு செய்திக்காகவும், நாங்கள் தனித்தனியாக அறிக்கை வெளியிடுவது பெரிய விஷயமாக ஆக்கப்படுகிறது. சசிகலா தற்போது அதிமுகவில் இல்லை. சட்டப்பேரவை தேர்தலின் போதுதான் அரசியலை விட்டு விலகி விட்டேன் என சசிகலா கூறியுள்ளார்.
சசிகலா அமமுகவினருடன் தான் பேசி வருகிறார். அதிமுகவினருடன் இல்லை. குழப்பத்தை ஏற்படுத்த ஆடியோ வெளியிடப்படுகிறது. பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. இது நடக்காது. சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பது தான் கட்சியினரின் கருத்து என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.