அன்னிய செலாவணி மோசடி வழக்கு - வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகிறார் சசிகலா
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அன்னிய செலாவணி மோசடி வழக்கில் வரும் 21 ஆம் தேதி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் பொருளாதா குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் , சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் சாட்சி விசாரணை முடிந்து விட்டது.
இதையடுத்து, சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யவேண்டும். இதற்காக அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று முதலில் உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் சிறையில் இருப்பதால் , சசிகலாவை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதற்கிடையில், சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குற்றச்சாட்டு பதிவின் போது கேட்கப்பட உள்ள கேள்விகளை முன்கூட்டியே தனக்கு தரவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு அமலாக்கப்பிரிவு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பளித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், கேள்விகளை முன்கூட்டியே வழங்க கோரிய சசிகலாவின் கோரிக்கயை நிராகரித்தது. கேள்விகளை முன்கூட்டியே வழங்குவது என்பது நீதிமன்ற நடைமுறையில் கிடையாது என கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் வரும் 21 ஆம் தேதி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகும்படி சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.