நாயர் பெண்கள் குறித்து சர்ச்சைக் கருத்து: காங்.எம்.பி.சசி தரூக்கு கைது வாரண்ட்: நீதிமன்றம் அதிரடி !!
30 வருஷத்துக்கு முன் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எழுதிய புத்தகத்தில் நாயர் பெண்களை அவதூறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி.யான சசி தரூர் மிக சிறந்த அரசியல்வாதி மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. சசி தரூர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 'தி கிரேட் இந்தியன் நாவல்' என்ற புத்தகத்தை எழுதி இருந்தார்.
சுதந்திர போராட்டத்தின் பின்னணியில் மற்றும் நாடு விடுதலை அடைந்த பிறகான முதல் 30 ஆண்டு கால நிகழ்வுகளின் பின்னணயில் இந்திய காவியமான மகாபாரதத்தை கற்பனை படைப்பாக அந்த புத்தகத் சசி தரூர் எழுதி இருந்தார்.
இந்த புத்தகம் கடந்த 1989ம் ஆண்டு முதலில் வெளிவந்தது. புத்தகம் வெளிவந்து 30 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அந்த புத்தகம் தற்போது சசி தரூக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புத்தகத்தில் நாயர் பெண்களை அவதூறாக சசி தரூர் குறிப்பிட்டுள்ளார் என திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கின் முதல் நாள் விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணைக்கு ஆஜராகதால் சசி தரூருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.
இது தொடர்பாக சசி தரூர் அலுவலகம் கூறுகையில், எந்த நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றுதான் சம்மனில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் எந்த நாளில் என்று அதில் குறிப்பிடப்படவில்லை.
எங்களது தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தேதியுடன் புதிய சம்மன் அனுப்புவதாக தெரிவித்தது. ஆனால் இன்று (நேற்று) வழக்கின் முதல் விசாரணை ஆனால் எங்களுக்கு எந்த சம்மனும் வரவில்லை. கைது வாரண்டை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம் என தெரிவித்தது.