Saruhassan post comments against Minister jayakumar

அம்மா வழியில் ஆட்சி செய்வோம் என்று சொல்வது அரசியல் கொள்ளையை நியாயப்படுத்தும் முறையாக தெரிகிறது என்று நடிகர் சாருஹாசன் பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகர் கமல் ஹாசன் தமிழகத்தை பாதிக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். தமிழக அரசு குறித்து தனது டுவிட்டர் பக்கத்திலும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். விரைவில் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் குற்றவாளிகள் நாடாளக் கூடாது என்றும் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்றும் கமல் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். கமலின் இந்த டுவிட்டர் பதிவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறினால், கமல் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்த நிலையில், கமல் ஹாசனின் சகோதரர் சாருஹாசன் பேஸ்புக்கில் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமைச்சர் ஜெயக்குமார், அம்மா வழியில் ஆட்சி நடத்துவதாக சொல்கிறார். இதைப்பார்க்கும்போது நாமும் 60 கோடிக்கும் குறையாமல் கொள்ளையடிப்போம் என்று சொல்கிறீர்களா? என்று கேட்க தோன்றுகிறது. உச்சநீதிமன்றம் அம்மா அவர்கள் தகுதிக்கு அதிகமாக அரசு ஊழியராக 60 கோடி சொத்து சேர்த்தார். அதை சசிகலாவுக்கு இனாமாக கொடுத்தார் (அல்லது தற்காலிகமாக கொடுத்து வைத்தார் என்று வைத்துக் கொள்வோம்) என்றும், இருவரும் குற்றவாளி என்றும் தீர்ப்பளித்தது. இந்த அமைச்சருக்கு நெஞ்சில் வீரமிருந்தால் இதை மறுக்க முடியுமா? இறந்தவர்களின் தவறுகளை மறக்கலாமே ஒழிய மன்னிக்க முடியாது.

அமைச்சரே, நீர் அம்மா வழியில் ஆட்சி செய்வோம் என்று சொல்வது அரசியல் கொள்ளையை நியாயப்படுத்தும் முறையாக தெரிகிறது. கமல்ஹாசனை விட்டு விடுங்கள். ரசிகர்கள் கலகம் செய்யக்கூடும். சாருஹாசன் சொல்கிறேன். 

அம்மா வழியில் ஆட்சி நடத்துவோம் என்று சொல்லும் வரை நீங்கள் வருங்கால குற்றவாளிகள் என்று தெரிகிறது. எனக்கு ரசிகர்கள் கிடையாது. ஒரு கலகமும் வராது. நான் உங்கள் அரசை நீதிமன்றத்தில் மட்டும்தான் சந்திப்பேன். என் வீட்டுவாசல் கதவு நிலையும் லஞ்சம் வாங்கியதில்லை. உங்கள் ஆட்சி தொடுக்கும் வழக்குகளை சந்திக்க தயார்.

இவ்வாறு நடிகர் சாருஹாசன் பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.