சர்கார் பட புரொமோஷனுக்காகத்தான் விஜய் இப்படி செய்தாரா ? டவுட் கிளப்பும் எம்எல்ஏ !!
சர்கார் பட பிரச்சனைக்காக தமிழகமே கொந்தளித்து வந்த நிலையில் நடிகர் விஜய் இது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை என் கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், இவர் வேண்டுமென்றே பட புரமோஷனுக்காக பிரச்சனையை ஏற்படுத்தி படத்திற்கு விளம்பரம் தேடுவது போல் தெரிகிறது என சந்தேகம் எழுப்பியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்து நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் கடந்த தீபாவளியன்று திரைக்கு வந்தது. பெரும் வசூலைக் கொடுத்த பாகுபலி, கபாலி மற்றும் காலா படங்களின் வசூலையே சர்கார் படம் தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தான் அந்தத் திரைப்படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி அதிமுகவினர் சர்கார் படம் ஓடும் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன.
அதே நேரத்தில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.ஆருகதாசை கைது செய்யவும் போலீசார் முயன்றனர். ஆனால் முருகதாஸ் நீதிமன்றம் சென்று முன்ஜாமீன் பெற்றுக் கொண்டார். பல இடங்கிளில் விஜய் ரசிகர்கள் அதிமுகவினரால் தாக்கப்பட்டனர். நேற்று மாலை மற்றும் இன்று காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
ஆனால் இவ்வளவு களேபரம் நடந்தும் நடிகர் விஜய் ஏன் வாயைத்திறக்கலை? எ ன் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்கார்' திரைப்படத்தின் பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ரசிகர்கள் ஆசை ஆசையாய் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது, விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன..
.நடிகர் விஜயின் படத்திற்காக கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்பட பலர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட விஜய் மெளனமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
நடிகர் விஜய்யின் மெளனம் பல சந்தேகங்களை எழுப்புகிறது என்றும், இவர் வேண்டுமென்றே புரமோஷனுக்காக பிரச்சனையை ஏற்படுத்தி படத்திற்கு விளம்பரம் தேடுவது போல் தெரிகிறதுஎன்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இவ்வளவு பிரச்சனைகளை சர்கார் சந்தித்துக் கொண்டிருக்கும்போது நடிகர் விஜய், இந்நேரம் கொந்தளித்து இருந்திருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.