கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் இருந்து மாறு வேடத்தில் தப்பி வந்ததாக எம்.எல்.ஏ சரவணன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன். இவர் தாங்கள் சிறை வைக்கப்படுவோம் என அறியாமலேயே சசிகலா ஆட்களுடன் வெளியே சென்றுள்ளார்.
தனக்கு பிடிக்காத இடத்தில் 5 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் கடுமையான மணல் உளைச்சளுக்கு ஆளாகி உள்ளார்.
சசிகலா வந்துவிட்டால் பிடித்து ஒரே இடத்தில் அடைத்துவிடுவார்கள் என்பதால் நேற்று இரவே இவர் தப்பி செல்வதற்கான திட்டங்களை தீட்டியுள்ளார்.
அதன்படி காலை 12 மணி அளவில் பேன்ட் மற்றும் டி-சர்ட் அணிந்து தலையில் கர்சீப் கட்டிக்கொண்டு யாரோ ஒரு சுற்றுலா பயனி போல் கடற்கரை ஓரத்தில் நடந்து சென்று கூவத்தூரை அடுத்த கிராமத்தை சென்றடைந்தார்.
அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மெயின் ரோடு வரை நடந்து வந்து லிப்ட் கேட்டு சென்னை வரை ஒரு வண்டியில் வந்துள்ளார். பின்னர், நண்பர்களை வரவழைத்து அவர்களுடன் ஓ.பி.எஸ் வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய சரவணன் எம்.எல்.ஏ, தன்னை போன்றே பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் மன உளைச்சலில் உள்ளதாகவும், அவர்களது உடலும் உள்ளமும் சோர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அவர்களை எப்போது வெளியே விட்டாலும் ஓடி வந்து ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளிப்பார்கள் என உறுதியோடு கூறியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினரின் இந்த பகீர் வாக்குமூலம் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் மட்டுமன்றி தொலைகாட்சியை பார்த்துகொண்டிருந்த பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
