sanjay nirupam criticized prime minister modi

பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதி செய்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மஹாராஷ்டிராவில் தலித் மாநாடு நடந்தபோது வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பான விசாரணையில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்து போலீஸார் பலரை விசாரித்து வந்தனர். அதில் ரோனா ஜேக்கப் என்பவரின் வீட்டிலிருந்து இருந்து கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது போன்று பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அதற்காக பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுநிகழ்ச்சி அல்லது அவரது சாலை பயணம் ஆகியவற்றை குறிவைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை போலீஸார் உளவுத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்துள்ள காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், மோடியின் புகழ் சரியும் போதெல்லாம் இத்தகைய விளம்பரங்களை அவர் தேடிக்கொள்வது வழக்கம். விளம்பரப் பிரியரான மோடி, விளம்பரத்திற்காக எதுவும் செய்வார் என விமர்சித்த சஞ்சய் நிருபம், இதன் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.