குடும்ப அரசியலே இருக்காது என கூறிவிட்டு கடந்த 50 ஆண்டுகளுக்கு அரசியலில் களமிறங்கியவர்தான் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். ஆனால், இன்று குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் சமாஜ்வாதி கட்சி உடையும் நிலையில் இருக்கிறது.

வாரிசு அரசியல்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்(வயது 76), குடும்ப அரசியலை ஒழிப்பதாக சவால் விட்டு, 50 ஆண்டு களுக்கு முன், அரசியலில் குதித்தார். 1989ம் ஆண்டு துவங்கி, மூன்று முறை முதல்வராக முலாயம் பதவி வகித்துள்ளார். கடந்த முறை, சட்டசபைத் தேர்தலில் வென்ற போது, மகன் அகிலேஷ் யாதவை முதல்வர் பதவியில் அமர்த்தி அழகுபார்த்தார்.

குடும்பிரச்சினை
ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்த முலாயம் சிங்கின் உறவினர்கள் இப்போது தேர்தல் நேரத்தை மனதில் வைத்து குட்டையை குழப்பத் தொடங்கி இருக்கிறார்கள். அதிலும், மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரின் சித்தப்பா சிவபால் யாதவுக்கும் இடையிலான பிரச்சினைதான் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
404 உறுப்பினர்களைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை பல வியுகங்களை வகுத்து காய் நகரத்தி வருகின்றன. இந்த நேரத்தில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டு இருக்கிற குழப்பம் ‘வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்த ’ கதையாக மாறி இருக்கிறது.
அமர்சிங் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில்தான் மீண்டும் கட்சியில் இணைந்தார். உடனே டில்லியில் முலாயம் சிங்கை, அமர்சிங் சந்தித்து பேசினார். இதையடுத்து அகிலேஷ் யாதவ்விடம் இருந்து, மாநில கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
அகிலேஷ் யாதவ், அமர்சிங் பெயரை குறிப்பிடாமல், வெளியாட்களின் தலையீட்டால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுவதாக குறிப்பிட்டார். சிவபால் யாதவ்விற்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் தலைமைச் செயலாளர் தீபக் சிங்கால் என்பவரையும் வேறு பதவிக்கு மாற்றினார்.
தனது ஆதரவாளர் நீக்கப்பட்டதை அறிந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்றுமுன்தினம் திடீரென தனது ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். இதில் 100-க்கும்மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதில் சிவபால் யாதவுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
கூட்டம் முடிந்த சிவபால் யாதவின் ஆதரவாளர்கள் ஒம் பிரகாஷ் சிங் உள்ளிட்ட 4 அமைச்சர்களை பதவியில் இருந்து அகிலேஷ் நீக்கி, தனது தந்தைக்கு தெரிவித்தார். மேலும், சித்தப்பா சிவபால்சிங்கும் முலாயம்சிங் யாதவை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். முதல்வர் அகிலேஷ் யாதவின் இந்த அதிரடி நடவடிக்கையால், கட்சி உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 6ஆண்டுகளாக கட்சியை விட்டு நீக்கி வைக்கப்பட்டு இருந்த அமர் சிங்கை கட்சியில் சேர்த்தது, பல கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய முக்தர் அன்சாரிகட்சியை சமாஜ்வாதி கட்சியுடன் இணைக்க வேண்டும் என சிவபால் யாதவ் கூறிய யோசனை ஆகியவைதான் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால், கட்சியில் உட்கட்சி பூசல் அதிகமாகி உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அப்படி உடைந்தால், அகிலேஷ் யாதவ் தலைமையில் தேசிய சமாஜ்வாதிகட்சி அல்லது பிரகதீஷில் சமாஜ்வாதி கட்சி என உதயமாகும் எனத் தெரிகிறது.
சமாஜ்வாதி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு இப்படி ‘கும்மியடித்ததுக்கும்’ பின்னனியில் பாரதிய ஜனதா கட்சியின் காய் நகர்த்தல்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது
ஏனென்றால், கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து, முலாயம் சிங் யாதவ்விற்கு பல முக்கிய ஆலோசனை, உத்திகளை வழங்குபவர் அவரின் தம்பி ராம் கோபால் யாதவ். அவர் அகிலேஷ் யாதவ்விற்கு ஆதரவாக உள்ளார்.
ராம்கோபால் யாதவ், டெல்லியிலே அதிகமாக தங்கியிருப்பதால், பாரதிய ஜனதா தலைவர் மட்டத்தில் நெருக்கம் அதிகம். ஆதலால் அடுத்த ஆண்டு சட்டப்பேரவையைத் கருத்தில் கொண்டு, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்க ராம்கோபால் யாதவ் மூலம் பா.ஜனதா முயலாம் எனவும் தெரிகிறது.
எப்படியும் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வரும் பாரதிய ஜனதா, சமாஜ்வாதி கட்சியில் பகிரங்கமாக வெடித்துள்ள மோதல், மக்களை பாரதிய ஜனதா பக்கம் திருப்பும் என்று கணக்கு போடுகிறது.

‘யாரும் பதவியைவிட்டு விலகத் தேவையில்லை. அமர்சிங்கும், சிவபாலும் எனக்கு தேவை, அகிலேஷ் யாதவும் வேண்டும்’ என்று முலாயம் தெரிவித்துள்ளார். அதன்பின், முலாயம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அகிலேஷ் யாதவும், சித்தப்பா சிவபால் யாதவும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவினர். இதையடுத்து கூட்டம் கலைந்தது.
தற்போது ஏற்பட்டுள்ள சமாதானம், நிரந்தர தீர்வா அல்லது புகை மூட்டத்தின் அடியில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பைப் போல், தற்காலிக தீர்வா என்பது சட்டசபை தேர்தல் நெருங்க, நெருங்கதான் தெரியவரும்.
