ருத்ரதாண்டவம் படத்தை திட்டமிட்டு எதிர்க்கிறாங்க... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..!
கோயில் நகைகளை உருக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத் திருக்கோயில்களில் பக்தர்கள் தானமாகவும் காணிக்கையாகவும் அளித்த நகைகளை, தங்கக் கட்டிகளாக மாற்றப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், இந்தத் திட்டத்தில் தூசி அளவுக்குக் கூட தவறுகள் நடக்காது என்றும் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இ ந் நிலையில் கோயில் நகைகளை உருக்க தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோயில் நகைகளை உருக்கக் கூடாது. இதுதொடர்பாக விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அறநிலையத்துறை சிறப்பாக செயல்படவும், தமிழகத்தில் காணாமல் போன 8000 கோயில்களை மீட்டெடுக்கவும் அமைச்சர் சேகர்பாபுவை நான் சந்திக்க தயார். மத்திய மாநில அரசுகள் இணக்கமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பல்வேறு திட்டங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும்.
இந்து மக்களின் தற்போதைய நிலை குறித்து ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் கூறப்பட்டுள்ளது. திட்டமிட்டு சிலர் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லுாரிகள் கட்டப்பட்டால், மத வழிபாடு குறித்த பாடம் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதை தமிழக அரசு செயல்படுத்துமா?” என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்..