தேவையின்றி வெளியே வந்தால் ரூ.500 அபராதம்... காவல்துறை நடவடிக்கை தீவிரம்..!
தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்தவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தொடங்கியது. பல இடங்களில் வாகனங்களில் வெளியில் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்தவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தொடங்கியது. பல இடங்களில் வாகனங்களில் வெளியில் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 10-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வருகிற 24-ந்தேதி வரையில் அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை கடைகள் மட் டும் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை திறந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டு இருந்தது
.
அதே நேரத்தில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி வெளியிட்ட அறிக்கையில், “ஊரடங்கை மீறி வெளியில் வரும் மக்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது” என்று தெரிவித்தார். இதன் காரணமாக சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் ஊரடங்கை மீறி வெளியில் வந்தவர்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் தேவையின்றி பலர் வாகனங்களில் வெளியில் சுற்ற தொடங்கினார்கள்.
கடந்த 3 நாட்களாக இது போன்று மக்கள் நடமாட்டம் அதிகரித்ததையடுத்து ஊரடங்கை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து சென்னையில் நேற்று முதல் போலீஸ் நடவடிக்கையை தாங்களாகவே தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் நேற்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அரசின் அறிவுரைகளை பொதுமக்களில் சிலர் ஒழுங்காக பின்பற்றாததால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்றும் எனவே பொதுமக்கள் போலீஸ் நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் போலீசார் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்தவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தொடங்கியது. பல இடங்களில் வாகனங்களில் வெளியில் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுபோன்ற இன்று மட்டும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சென்னையில் சுமார் 200 இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். 360 ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி ரோடு, அண்ணாசாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பிற்பகலில் போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். அப்போது முகக்கவசம் அணியாதவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னையில் கடற்கரை பகுதியில் டிரோன் கேமரா மூலமும் போலீசார் கண்காணித்தனர். காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய கடைகளை சரியாக 12 மணிக்கு மூடி விட வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதனை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.