குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை... பயனாளிகள் தேர்வு முடிந்தது..? இவர்களுக்கெல்லாம் கிடையாதாம்..!
எந்த தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறித்தும் தமிழக அரசு வெளிப்படையாகக் கூறவில்லை.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று 100-வது நாளை கடந்துள்ளது. இதையடுத்து 100 நாள் சாதனை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்ற திமுக அமைத்திருக்கும் ஆட்சி என்பது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஆறாவது முறை அடைந்த மாபெரும் வெற்றி. ஐந்தாண்டு கால ஆட்சியில் 100 நாட்கள் என்பது குறைவானது தான். ஆனால் இந்த 100 நாட்களின் கழக அரசு செய்துள்ள சாதனைகள் நிறைவானது என்பதை எண்ணி மகிழ்கிறேன்.
கொரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து மக்களை காத்தல், எந்த அலையையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை மாற்றுதல், மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம், பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, கொரோனா நிவாரண நிதியாக 2 கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு 4 ஆயிரம் ரூபாய், இந்தியாவின் வேறு எந்த மாநில அரசும் வழங்காத 9 ஆயிரம் கோடி மதிப்பிலான 14 மளிகை பொருட்கள். குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு
நமக்கு நாமே, அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களுக்கு புத்துயிர்ப்பு, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் என முத்தான பத்து திட்டத்தை வழங்கி இருக்கிறோம். 120-க்கும் மேற்பட்ட முக்கியமான அறிவிப்புகள், முன்னெடுப்புகள் செய்யப்பட்டு இருந்தாலும் அதில் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்கான முதன்மையான திட்டங்களை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தினை ஏன் இன்னும் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் முறையில் அரசு ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இப்போது தேர்வு செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.1000 வழங்கப்படாது எனத் தெரிவிகிறது. அதே நேரத்தில் எந்த தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறித்தும் தமிழக அரசு வெளிப்படையாகக் கூறவில்லை.