“கரூர் மாநகராட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு, கரூர் காமராஜபுரத்தில் மார்ச் 7-ம் தேதி (இன்று) ரூ.1 கோடி பரிசுத் தொகையுடன், பாராட்டு விழா நடத்தப்படும்”
கரூர் மாநகராட்சித் தேர்தலில் வாக்குக்குப் பணம் கொடுக்கமால் வெற்றி பெற்ற கவுன்சிலருக்கு ரூ.1 கோடி வழங்குவதாக தேர்தலில் தோல்வியடைந்த சுயேட்சை வேட்பாளர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றது. இதில் கரூர் மாநகராட்சியை திமுக கூட்டணியே கைப்பற்றியது. கரூர் மாநகராட்சியில் திமுக சார்பில் மேயர், துணை மேயர் பொறுப்பேற்றுவிட்டனர். ஆனால், கரூர் மாநகராட்சியில் உள்ள 26-ஆவது வார்டில் சுயேச்சையாக ராஜேஷ் கண்ணன் என்பவர் போட்டியிட்டார். இந்த வார்டில் மொத்தம் 6 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் திமுக வேட்பாளர் மா.ரமேஷ் 1,596 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். பாஜக வேட்பாளர் ரா.செல்வன் 427 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்தார். சுயேச்சையாப் போட்டியிட்ட ராஜேஷ் கண்ணன் 335 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றார். இவருக்கு அடுத்தப்படியாகத்தான் அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஆகியோர் வந்தனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்தலில் தோல்வி அடைந்த ராஜேஷ் கண்ணன் கரூரில் பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். அந்தச் சுவரொட்டியில், “கரூர் மாநகராட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு, கரூர் காமராஜபுரத்தில் மார்ச் 7-ம் தேதி (இன்று) ரூ.1 கோடி பரிசுத் தொகையுடன், பாராட்டு விழா நடத்தப்படும். நேர்மையான முறையில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சுவரொட்டியைக் கண்டு பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். அதேவேளையில் அரசியல் கட்சியினர் அதிருபதி அடைந்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வாரி இறைத்ததாகப் புகார் எழுந்தது. இந்நிலையில் தேர்தலில் தோல்வியடைந்த சுயேட்சை வேட்பாளரின் இந்த சுவரொட்டி கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
