கணவருக்கு கொரோனா தொற்று உறுதி... திடீரென பிரியங்கா காந்தி வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவிற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. எனவே மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஸ்மிருதி ராணி, உ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். இன்று பிரதமர் மோடி மதுரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திமுக சார்பில் அவர்களுடைய கூட்டணியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார். இதனிடையே கொரோனாவும் ஒரு பக்கம் தன் பிடியை இறுக்கியுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 10 வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அரசியல் பிரமுகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் வந்ததால் அவர் தன்னை வீட்டிலேயே சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பிரியங்கா காந்திக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்றே வந்துள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளதால் இன்று அசாமிலும், நாளை தமிழகத்திலும், நாளை மறுநாள் கேரளாவிலும் பங்கேற்கவிருந்த தேர்தல் பிரச்சார கூட்டங்களை ரத்து செய்வதாக அவரே வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.