ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் - ட்ராஃபிக் ராமசாமி முறையீட்டை ஏற்று உயர்நீதிமன்றம் நாளை விசாரணை...
ஆர்.கேநகர் இடைத்தேர்தலுக்கு தடை கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். முறையீட்டை வழக்காக ஏற்று நாளை விசாரணை நடத்துகிறது உயர்நீதிமன்றம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் என 62 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
மேலும் சில கட்சிகள் வெளியூர் அடியாட்கள் மூலமாக பணபட்டுவாடா செய்து குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றி பெற தந்திரமாக செயல்பட்டு வருவதாக தேர்தல் அலுவலகத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்த புகார்களை அடுத்து தேர்தல் அதிகாரிகளும் பல தடுப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பணபட்டுவாடா செய்த சிலரை கைதும் செய்துள்ளது.
இந்நிலையில், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா அதிகரித்துள்ளதால் தேர்தலை தடை செய்யவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
இதையடுத்து முறையீட்டை வழக்காக மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இதுகுறித்த வழக்கு நாளை விசாரணை செய்யப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.