r.k.nagar bye election date will be announced next month

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் தேதி வரும் நவம்பர் மாதமே அறிவிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாக ஓட்டுகள் பதிவாகின. அங்கு ஏன் குறைவாக ஓட்டுகள் பதிவானது என்பது பற்றிய ஆய்வை இந்திய தேர்தல் கமிஷன் நடத்த தொடங்கி உள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான சுருக்க திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதோடு, இதுபோன்ற வாக்குச்சாவடிகள் அடங்கிய பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் இடம் மாறிவிட்டார்களா? அல்லது அங்கு வசித்துக்கொண்டிருந்தாலும், தேர்தலில் ஓட்டு போட வரவில்லையா? என்பது பற்றிய ஆய்வை நடத்துகின்றனர்.

சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதுபற்றியும் ஆய்வு நடத்தப்படுவதாக இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இதனிடையே குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. டிசம்பரில் அங்கு தேர்தல் நடத்தப்படும். அதற்கான அறிவிப்பை நவம்பர் மாதம் தேர்தல் கமிஷன் அறிவிக்கக்கூடும். அப்போது சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.