ஆர்.கே.நகரால் அரண்டு போன அரசியல் உலகம்! ரஜினியின் அரசியல் குழப்ப சஸ்பென்ஸ் 31ம் தேதி வரை நீட்டிப்பு!
நடிகர் ரஜினி காந்த் புதிய அரசியல் கட்சியைத் துவங்குவாரா அல்லது வேறு ஏதாவது அரசியல் முடிவு எடுப்பாரா என்ற குழப்ப நிலை வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. அதற்குக் காரணமாக அமைந்தது ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு என்றால் நம்புவதற்கு கடினமாக எல்லாம் இருக்கப் போவதில்லை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செவ்வாய்க்கிழமை இன்று முதல் தனது ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். தொடர்ந்து 6 நாட்கள் அவர் ரசிகர் சந்திப்பை நிகழ்த்துகிறார். இதற்காக, மாவட்ட வாரியாக பட்டியல் எல்லாம் முன்பே கொடுக்கப் பட்டு, ரசிகர் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.
பட்டியலில் தெரிவித்தபட், டிச.26 இன்று, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் ரஜினி. முன்னதாக தனது ரசிகர்களிடம் தன் அரசியல் நிலைப்பாட்டை வரும் 31ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். அவரின் அறிவிப்பைக் கேட்டு ரசிகர்கள் கேட்டு உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பார் என்று ரசிகர்களிடம் தகவல் பரவியது. ஆனால், அது அரைகுறையான தகவல் என்று பின்னர் தெரியவந்தது.
தற்போது வந்துள்ள தகவலின்படி, அவர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அதே நேரம் வேறு ஒரு அரசியல் திட்டத்தை மனதில் வைத்துள்ளார். அது என்ன என்பதை அவருடைய மிக நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியப் படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, வரும் 31ஆம் தேதி ரஜினி புதிய கட்சி அறிவிப்பு எதையும் வெளியிடப் போவதில்லையாம்.
எனக்கு அரசியல் தெரியும், ஆழம் தெரியாமல் காலை விடக் கூடாது.அரசியலுக்கு நான் புதிதல்ல; அரசியலின் ஆழம் தெரிந்ததால் தான் தயங்குகிறேன் என்று கூறியுள்ளார் ரஜினி காந்த். அவர் இப்போது கண்டுள்ள அடுத்த அரசியல் ஆழம், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு தந்துள்ள ஆழம். ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்பதுபோல், இப்போது ஆர்.கே.நகரால் எல்லாமே பறந்து போயுள்ளன. அந்த பாதிப்பு, அரசியலில் குதிக்கத் தயாராக இருக்கும் கமலுக்கும் சரி, ரஜினிக்கும் சரி ஒரு பாடம் தான் என்று தெளிவாகக் கூறி வருகிறார்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்கள்.
ஊழலுக்கு எதிராக செயல்படப் போவதாகக் கூறி வரும் கமலுக்கு, ஊழல் செய்யாமல் ஒரு தேர்தலில் நின்று ஜெயிப்பதற்குத் தேவையான பணம் வருமா என்பதை இப்போது கேள்விக் கணையாகக் கூறி வருகிறார்கள். ரஜினிக்கும் அதே விதமான அறிவுரைதான் என்பதால், டிச.31ம் தேதி என்ன கூறப்போகிறார் என்பதை அறிய அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், ரஜினி அறிவிக்கப் போகும் 31ம் தேதி செய்தி, வெறும் புத்தாண்டு வாழ்த்தாகத்தான் இருக்கும் என்று நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார் நடிகரும் பாஜக., பிரமுகருமான எஸ்.வி.சேகர்.
அவர் இது குறித்துக் கூறியபோது,“ ரஜினி நிச்சயமாக புத்தாண்டு வாழ்த்து சொல்வார். அரசியல் பிரவேசம் குறித்து அவர் சொல்லும்வரை அவர் சொல்வாரா, மாட்டாரா என்ற யூகங்களின் அடிப்படையிலான சூதாட்டமாகவே இருக்கும். எம்.எல்.ஏ. ஆவது சுலபம் என்றாலும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சராவது கடினம்” என்று கூறியுள்ளார். மேலும், ரஜினி குறித்து அமிதாப்பச்சன் பேசலாம்; ஆனால் தமிழருவி மணியன் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.