ஆர்.கே.நகர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் - பா.ம.க கோரிக்கை
ஆர்.கே.நகரில் பணபட்டுவாட அதிகரித்துள்ளதால் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க வழக்கறிஞர் பாலு தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்காணியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
ஆர்.கே நகரில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் அதிமுக அம்மா அணி சார்பில் தினகரனும் அதிமுக புரட்சிதலைவி அம்மா சார்பில் மதுசூதனனும், பாஜக சார்பில் கங்கை அமரனும், திமுக சார்பில் மருதுகணேஷும் உள்ளிட்ட 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
ஆளுங்கட்சியான தினகரன் தரப்பில் பண பட்டுவாடா தலைவிரித்து ஆடுவதாக புகார்கள் தேர்தல் ஆணையத்தில் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து தேர்தல் கமிஷன் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனாலும் பணபட்டுவாடா குறைந்த பாடில்லை என்று புகார்கள் வலுத்து வருகிறது.
இந்நிலையில் பணபட்டுவாட அதிகரித்துள்ளதால் ஆர்.கே.நகர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என பா.ம.க வழக்கறிஞர் பாலு தலைமை தேர்தல் அதிகாரி லக்காணியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பாலு கூறியதாவது :
ஆர்.கே.நகரில் மிகப்பெரிய அளவில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கபடுகிறது.
பணபட்டுவாடா செய்யும் டி.டி.வி.தினகரனுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண விநியோகம் செய்யப்பட்டதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
அதனால் தேர்தலை தள்ளி போடுவதை விட பண விநியோகம் செய்யும் வேட்பாளரை தேர்தலில் இருந்து புறக்கணிப்பதே சரியான முடிவாக இருக்கும்.
அப்போது தான் தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில் இதுபோன்ற தவறுகளில் யாரும் ஈடுபடமாட்டார்கள்.
இவ்வாறு கூறினார்.