விஷாலுக்கு ’லவ்லி’ வாழ்த்து சொன்ன குஷ்பு ; போர்க்கொடி தூக்கும் சொந்த கட்சி..! கூட்டணியை மறந்துட்டீங்களே மேடம்...!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு காங்.கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.கே.நகர் சட்ட சபை தொகுதியின் உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கையை தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியிட்டது.
இதையடுத்து அதிமுக, திமுக, பாஜக, டிடிவி தினகரன், ஜெ.தீபா, நடிகர் விஷால் என 135 பேர் இதுவரை வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.
இதில் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழும்பியுள்ளது. மேலும் அதிமுக திமுகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணி என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் சுயேட்சையாக களமிறங்கும் நடிகர் விஷாலுக்கு செல்லமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், ’விஷால் உனக்கு ஆதரவு குரல் கொடுத்த குறுகிய நட்பு வட்டாரத்துக்காகவாவது நீ வெற்றி பெற வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் குஷ்பு மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.