அப்படின்னா இரட்டை இலை சின்னமும், அ.தி.மு.க.ங்கிற பெயரும் டம்மிதானா?: அமைச்சர்களை அலற வைக்கும் தோல்வி கேள்விகள்...
ஆர்.கே.நகர் தேர்தலில் நிச்சயம் ஜெயிப்போம்: என்று எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் அணியை அநியாயத்துக்கு நம்ப வைத்த விஷயம் இரட்டை இலை சின்னமும், கட்சியின் பெயரும் அவர்களின் கைகளுக்கு கிடைத்ததாலேதான். அந்த மிதப்பில்தான் சின்னம் கிடைத்த மறுநாளே தேர்தலை அறிவித்தார்கள்.
இரட்டை இலை சின்னத்தை ’உரிமையை மீட்டோம்’ என்று சொல்லி கையில் வைத்துக் கொண்டும், அ.தி.மு.க. எனும் பெயரை திகட்ட திகட்ட உச்சரித்துக் கொண்டும் ஊர்வலம் வந்தது முதல்வர், துணைமுதல்வர் அடங்கிய அமைச்சர்கள் கூட்டம்.
ஆனால் தினகரனையோ அதிகார மையம் கார்னர் செய்து கடுப்பேற்றியது. கடந்து முறை அவர் தேர்வு செய்திருந்த, மக்கள் மனதில் பதிந்திருந்த தொப்பி சின்னத்தை கூட தர மறுத்தார்கள். குக்கர் சின்னத்தை ஒதுக்கி குதூகலப்பட்டார்கள்.
ஆனால் எதற்கும் அசரவில்லை தினகரன். ’உங்களை உள்ளே வெச்சு வேக வைக்கிறேன்’ என்று கெத்தாக கர்ஜித்தப்படிதான் குக்கரை தூக்கிக் கொண்டு வீதிவீதியாக வலம் வந்தார். நின்றார், அமோகமாக வென்றிருக்கிறார்.
அதுவும் இரட்டை இலை சின்னத்தையும், ‘அ.தி.மு.க.’ எனும் பெரும் பெயரையும் கையில் வைத்திருந்த அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை விட நாற்பதாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்த படு தோல்வி மு, து.மு. உள்ளிட்ட அமைச்சர் பரிவாரத்தை அலற வைத்துள்ளது. அப்படியானால் ‘இரட்டை இலை சின்னம்’ மற்றும் ’அ.தி.மு.க.’ எனும் பெயர் இரண்டுக்குமான மதிப்பு அம்மா காலத்தோடு முடிந்துவிட்டதா? நம் கையிலிருந்தால் அது டம்மிதானா? என்று தலையில் கைவைத்து புலம்பி வருகிறார்கள்.
அரசியல் விமர்சகர்களும் இந்த பாயிண்டை மிக முக்கியமானதாக கருதுகிறார்கள். காரணம் ஜெயலலிதா அமோகமான வாக்குகளை அள்ள மிக முக்கிய காரணம் அவர் காட்டும் இரட்டை இலை சின்னம். எம்.ஜி.ஆரின் உயிராகவே அந்த சின்னத்தை பார்த்தார் ஜெ., அதனால்தான் மீண்டும் மீண்டும் அந்த சின்னத்தை முன்னிலைப்படுத்தி, உச்சரித்து உச்சரித்து உருவேற்றி அதை மிக லாவகமாக பயன்படுத்தி அரசியல் வெற்றியை சாதகமாக்கினார்.
ஆனால் அந்த சின்னமும், கட்சிப் பெயரும் இன்ரு பழனி-பன்னீர் இணைந்த் அணியின் கையில் இருந்தும் ஜெயிக்க முடியவில்லை. அதே அ.தி.மு.க.விலிருந்து விரட்டப்பட்ட தினகரனால் அமோகமாக ஜெயிக்க முடிகிறதென்றால் இனி தமிழ்நாட்டில் சின்னத்தை வைத்துக் கொண்டு அரசியலில் சாதித்துவிடுவோம் என நம்ப முடியாது! மக்களின் அபிமானமே முக்கியம் என்பது தெளிவாகியுள்ளது! என்று இதை யதார்த்த கோணத்தில் அணுகியுள்ளனர்.