தவறுக்கு மன்னிப்பு கேட்க தயார்.. மன்றாடும் ஒய்வு பெற்ற நீதிபதி கர்ணன்.. ஜாமின் தர முடியாது நீதிமன்றம் அதிரடி.
இது தொடர்பாக வழக்கறிஞர் தேவிகா கொடுத்த புகாரில் ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவதூறாக பேசி விடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர் சி.எஸ்.கர்ணன். இவர் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களது குடும்ப பெண்கள், பெண் வழக்குரைஞர்கள், உயர்நீதிமன்ற பெண் பணியாளர்கள் ஆகியோரை அவதூறாக பேசி பல விடியோக்களை வெளியிட்டார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் தேவிகா கொடுத்த புகாரில் ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்க கோரி சி.எஸ்.கர்ணன் தாக்கல் செய்த மனுவை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.எஸ்.கர்ணன் ஜாமீன் கோரிமனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே தான் கடும் மன அழுத்ததிலும் விரக்தியிலும் இருந்து வந்த நிலையில் நீதிபதிகள் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிட்டதாக கூறினார்.
மேலும் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதால், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என சி.எஸ்.கர்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில், நீதிமன்றம் எச்சரித்த பின்னரும் நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண்கள் குறித்து 20 அவதூறு வீடியோக்களை கர்ணன் வெளியிட்டதால் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , சி.எஸ்.கர்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.