rescue the fishermen in sea road blockade in kumari
ஓகி புயலால் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்டுத்தரக்கோரி கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓகி புயல், கன்னியாகுமரி மாவட்டத்தையே மிரட்டி எடுத்தது. தற்போது லட்சத்தீவிலிருந்து 270 கிமீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும் தொடர்ச்சியாக வடமேற்கு திசையில் நகர்ந்துசென்றுவிடும் என்பதால் இனிமேல் தமிழகத்திற்கு பாதிப்பில்லை எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எனினும் ஓகி புயல் உருவாகி வலுவடைந்த சமயத்தில், மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர். சுமார் 17 ஹெலிகாப்டர்களில் இந்திய விமானப்படையினர் தேடி வருகின்றனர். சில மீனவர்களை அவர்கள் மீட்டுள்ளனர்.
எனினும் கடலுக்கு சென்ற 500க்கும் அதிகமான மீனவர்கள், இன்னும் கரை திரும்பவில்லை எனவும் அவர்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி குமரி மாவட்டம் சின்னத்துறையில், பெண்கள், குழந்தைகள் என மீனவ மக்கள் நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கடலோர காவல் படையினர், மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்துள்ளார்.
எனினும் மீட்டுத்தரும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து தொடர்ச்சியாக மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவர், மீனவ மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
