தேமுதிக என்றால் பத்திரிக்கையாளர்களை அவமானப்படுத்துவது எனபது சாதாரண விஷயம். தலைவர் விஜயகாந்தே பத்திரிக்கையாளர்கள் மீது பாய்வதால் நிர்வாகிகளும் அதேபோல் இருந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் தொடர் தோல்விக்கு பிறகு சீண்ட் ஆளில்லாமல் போனதால் திடீரென தனது நிலைபாட்டிலிருந்து கீழே இறங்கிய தேமுதிக நிர்வாகிகள் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த மரியாதையை பார்த்து திகைத்து போனார்கள்.

தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளிக்கப்படும் அவமரியாதை ஊரே அறிந்தது. ஊரெல்லாம் மனித உரிமை தர்மம் பற்றியெல்லாம் பேசும் விஜயகாந்தும் , தேமுதிக நிர்வாகிகளும் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் எதிர்கேள்வி கேட்பதும் , திட்டுவதும், துப்புவதையும் வாடிக்கையாக வைத்திருந்தனர்.

இதற்கும் ஒருபடி மேலே போய் தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு செல்லும் செய்தியாளர்களை , கேமரா மேன்களை கடும் வெயிலில் வறுத்தெடுக்கும் வகையில் கேட்டுக்கு வெளியே வேண்டுமென்றே நிறுத்துவதும், குடிக்க தண்ணீர் கூட தராமல் வெயிலில் பல மணி நேரம் கால் கடுக்க நிற்க வைப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர். மழைக்காலம் என்றால் சொல்லவே வேண்டாம். 

இவர்களது கூட்டணி கட்சித்தலைவர்கள் வைகோ தனது அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கும் மரியாதை, இடதுசாரிகட்சித்தலைவர்கள் , வாசன் போன்றோர் செய்தியாளர்களை மதிப்பது தெரிந்தும் இவர்கள் மட்டும் திருந்தாமலே இருந்தனர்.

 யாராக இருந்தாலும் காலம் தானே ஆசிரியன் , காலம் இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டியது. தொடர் தோல்வி கட்சி நிர்வாகிகள் வெளியேற்றம். கட்சியில் யாரும் இல்லாத நிலை. பத்திரிக்கையாளர்களும் போனால் மதிப்பதில்லை என்று வருவதில்லை.

இதனால் விஜயகாந்த் மனதிலும், தேமுதிக நிர்வாகிகள் மனதிலும் மாற்றமும் ஓரத்தில் ஒரு கனிவும் திடீரென பெருக்கெடுத்துள்ளது.

இந்தநிலையில் இன்று காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் திருநாவுகரசர், தேமுதிக தலைவரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு வர உள்ளார் என்ற செய்தி வெளியானது. வழக்கம் போல் வெளியே வெயிலில் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் வாட வேண்டும் என்ற எண்ணத்தில் நிகழ்ச்சியை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு ஆச்சர்யம்.

 முதல்முறையாக உள்ளே அனுமதிக்கபட்டும், அவர்களுக்கு என தனி இடமும் ஒதுக்கப்பட்டு அவர்களை மரியாதையாக அங்குள்ள நிர்வாகிகள் அமர்த்தினர். செய்தியாளர்களின் வசதிக்காக இருக்கைகளும், தண்ணீர், மின் விசிறி ஆகிய வசதிகள் செய்து தரப்பட்டது. 

இதைப்பார்த்த செய்தியாளர்கள் நாம் தேமுதிக அலுவலகம் தான் வந்துள்ளோமா , அல்லது இடம் மாறி வந்துவிட்டோமா என சந்தேகத்துடன் சார் விஜயகாந்த் சார் இருக்கிறாரா என்று நிர்வாகிகளை கேட்க இருக்கிறார், உள்ளே இருக்கிறார் என்று அவர்கள் கூறியவுடன் தான் நம்பிக்கையே வந்துள்ளது. 

இந்த வேலையை முன்பே செய்திருக்கலாம் கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் என்று ஒருவருக்கொருவர் கூறி சிரித்து கொண்டனர்.