reporters slams on minister velumani

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை கேட்டதால் பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்துவரும் நிலையில், வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இன்று காலை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பின்னர் கழிவுநீர் அகற்றும் நிலையங்களில் ஆய்வு செய்தார். அடையாறு பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். 

பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதற்குப் பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டுள்ளதாகவும் 15 மண்டலங்களாக பிரித்து கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வெள்ள பாதிப்புகள் தொடர்பாக இதற்கு முன்பைவிட துரித கதியில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமெரிக்கா, லண்டன், பெங்களூருவைவிட வெள்ள தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார்.

ஒருநாள் மழைக்கே தாம்பரம் முடிச்சூர், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கியிருப்பதை சுட்டிக்காட்டி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து மற்ற செய்தியாளர்களும் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர். இவையனைத்தையும் கடந்து பதிலளிக்க முயன்ற அமைச்சர் வேலுமணி, பல கேள்விகள் கேட்கப்பட்டதால் திணறினார். 

தொடர் கேள்விகளை கேட்ட செய்தியாளர் ஒருவரின் பெயரை அமைச்சர் கேட்க, பெயரை சொல்ல செய்தியாளர் மறுத்துவிட்டார். அதன்பிறகும் செய்தியாளர் கேள்வி கேட்க, அவரை எதிர்க்கட்சி ஆதரவு மீடியா எனக்கூறி பதிலளிக்க மறுத்து அவர் சொல்லவேண்டிய கருத்துகளை மட்டும் தொடர்ந்து கூறினார்.

கேள்வி கேட்ட செய்தியாளரின் பெயரைக் கேட்டது, அரசுக்கு எதிரான மீடியாக்கள் சில இருக்கின்றன என்பன போன்ற அமைச்சர் வேலுமணி தெரிவித்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.