அலங்கார ஊர்தி நிராகரிப்பு.. ஸ்டாலின் அறிவிப்பை அப்படியே காப்பி பேஸ்ட் செய்த மம்தா.. மாஸ் காட்டும் முதல்வர்கள்!
சென்னையில் நடைபெறும் குடியரசுத் தின அணிவகுப்பில் இடம்பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் அந்த ஊர்தி காட்சிப்படுத்தப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஸ்டாலின் செயல்படுத்திய அதே யோசனையை மம்தா பானர்ஜியும் செயல்படுத்த உள்ளார்.
குடியரசு தின அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் அந்த ஊர்தி இடம் பெறும் என்று தமிழக முதல்வர் அறிவித்ததைப் போல மேற்கு வங்க முதல்வ மம்தா பானர்ஜியும் அறிவித்துள்ளார்.
குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் நடக்கும் விழாவில் நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் அணிவகுப்பு நடப்பது வழக்கம். இதேபோல மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பும் நடக்கும். நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையிலான கருப்பொருளில் இந்த ஊர்தி அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஒவ்வொரு மாநிலங்களும் யோசனையை அனுப்பின. இதற்கென செயல்படும் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் மத்திய விழாக்கள் இயக்குநரகம்தான் குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளை இறுதி செய்கிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து வ.உ.சி.,பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் அடங்கிய அலங்கார ஊர்தி குறித்த மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த அலங்கார ஊர்தியில் இடம்பெற்ற வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார் குறித்து கேள்வி எழுப்பிய மத்திய தேர்வூக் குழு, அலங்கார ஊர்தியை நிராகரித்தது.
அதேபோல மேற்கு வங்கம் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை நிறுவப்பட்ட அலங்கார ஊர்தி அனுப்பப்பட்டது. ஆனால் இதையும் மத்திய அரசின் தேர்வுக் குழு நிராகரித்தது. கேரளாவின் அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கடிதம் எழுதினர். ஆனால், இந்தக் கடிதங்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இதனையடுத்து மத்திய அரசு நிராகரித்த தமிழக ஊர்தி, சென்னையில் நடைபெறும் குடியரசுத் தின அணிவகுப்பில் இடம்பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் அந்த ஊர்தி காட்சிப்படுத்தப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்டாலின் செயல்படுத்திய அதே யோசனையை மம்தா பானர்ஜியும் செயல்படுத்த உள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்க அரசு ரவீந்திரநாத் தாகூர் உருவத்தை அலங்கார ஊர்தியில் இடம்பெறச் செய்தபோதும் இப்படித்தான் நிராகரித்தனர். இப்போது நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் உருவம் இடம்பெற்ற ஊர்தியையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. கொல்கத்தாவில் ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்த அலங்கார ஊர்தி வலம் வரும்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.