விஜய்யை வைத்து பாஜகவை கழட்டிவிட ரங்கசாமி பிளான்.? தொடரும் NR துரோக அரசியல்..! உடைக்கும் கோலாகல சீனிவாசன்.
விரைவில் பாஜகவை கழட்டிவிட என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி முடிவு செய்துள்ளார் என்றும், அதனால்தான் விஜய்யை அவரது இல்லத்திற்கே சென்று அவர் சந்தித்துள்ளார் என்றும் மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் கூறியுள்ளார்.
விரைவில் பாஜகவை கழட்டிவிட என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி முடிவு செய்துள்ளார் என்றும், அதனால்தான் விஜய்யை அவரது இல்லத்திற்கே சென்று அவர் சந்தித்துள்ளார் என்றும் மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் கூறியுள்ளார். மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவே அவர்கள் கூறினாலும் அரசியல் காரணம் இல்லாமல் ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசும் அளவிற்கு வேறு விஷயம் இல்லை என்றும் கோலாகலம் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, நடிகர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இது பல யூகங்களை கிளப்பி இருக்கிறது. இப்போது இந்த சந்திப்புக்கு என்ன அவசியம்? பாஜகவை குறிவைத்து காய்கள் நகர்த்தப்படுகிறதா? என்பது பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் விஜய். இப்போது படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது, தற்போது பனையூர் பண்ணை வீட்டில் ஓய்வில் இருக்கிறார் விஜய். சென்னை அருகே உள்ள பனையூர் பங்களாவில் நடிகர் விஜயும் புதுவைக் முதல்வரும், என்.ஆர் காங்கிரஸின் தலைவருமான ரங்கசாமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடினர். தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் சூழ்நிலையில், இருவரும் சந்தித்துள்ளனர்.
தொழிலதிபர் ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள சென்னைக்கு வந்த என் ரங்கசாமி வழியில் பனையூரில் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். புதுவை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ரங்கசாமியை சந்திக்க விஜய் நேரம் கேட்டார். அப்போது தேர்தல், கொரோனா தொற்று காரணமாக முக்கிய விருந்தினர்களின் சந்திப்பை தவிர்த்து வந்தார் ரங்கசாமி. தற்போது கொரோனா பரவல் முடிந்துள்ள நிலையில், சென்னை திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பும் போது விஜய் ரசிகர் மன்றத் தலைவரான புதுச்சேரியை சேர்ந்த பூஸ்சி ஆனந்த் முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பின் பேரில் மரியாதை நிமித்தமாக விஜய்யை சந்தித்துள்ளார் ரங்கசாமி. அப்போது தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தனது விஜய் ரசிகர் மன்றத்திற்கு தனது ஆதரவை ரங்கசாமி தெரிவிக்க வேண்டுமென விஜய் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ரங்கசாமி என்ன செய்துவிட முடியும் என்பது கேள்வியே.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தேர்தலை சந்தித்து பல இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குகிறது, தேர்தலின்போது இயக்கத்தின் கொடியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்த அமைப்பின் தலைவர் அறிவித்துள்ளார், இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ரங்கசாமி விஜய் சந்திப்பு நடந்துள்ளது. புதுச்சேரியில் பாஜக என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தொகுதி பங்கீடு, சபாநாயகர் பதவி, நியமன எம்எல்ஏக்கள் என ஆரம்பம் முதலே இரண்டு கட்சிகளுக்கும் இடையே அதிருப்தி நிலவி வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்று எட்டு மாத காலம் ஆகியும் கொடுத்த வாக்குறுதிகளை ரங்கசாமி நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. புதுச்சேரி மாநிலத்தில் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நிதிக்காக, டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை ரங்கசாமி சந்திக்க வேண்டுமென பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால் ரங்கசாமி டெல்லி செல்வதை தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில்தான் அவர் நடிகர் விஜய்யை வீட்டுக்கே சென்று சந்தித்திருக்கிறார். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கூட்டணிக் கட்சியினர் மத்தியில் விஜய்யுடனான சந்திப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக வினர் என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு புதுவை மக்கள் மீது அக்கறை இல்லையா என கேள்வி எழுப்புகின்றனர். வளர்ச்சி திட்டத்திற்காக பிரதமர் மோடியை சந்தித்து நிதி கேட்கவோ அல்லது அவருக்கு நன்றி தெரிவிக்கக் கூட ரங்கசாமிக்கு நேரமில்லையா? என்றும், ஆனால் நடிகர் விஜய்யை மட்டும் மரியாதை நிமித்தமாக சந்திக்க நேரம் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜய்யை ரங்கசாமி சந்தித்திருப்பதை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது. 2011 தேர்தலின் போது ஜெயலலிதாவுக்கு ஏமாற்றம் கொடுத்தவர்தான் ரங்கசாமி, 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார் ரங்கசாமி, மெஜாரிட்டிக்கு 16 தொகுதிகள் தேவை, ஆனால் என்.ஆர் காங்கிரசுக்கு 15 தொகுதிகள் கிடைத்தது. அப்போது அதிமுக ஐந்து தொகுதிகளில் வென்றது.
நியாயமாகப் பார்த்தால் அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அவர் அமைத்திருக்கவேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை, வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளரை தன்னுடன் இணைத்துக்கொண்டு ஆட்சி நடத்தினார் ரங்கசாமி. அது அப்போது ஜெயலலிதாவுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. மரியாதை நிமித்தமாககூட ஜெயலலிதாவை அவர் சந்திக்கவில்லை, இதுதான் ரங்கசாமியின் அரசியல் நாகரீகம், அவரது டிராக் ரெக்கார்டு. அப்படிப்பட்டவர் திடீரென விஜய்யை சந்திக்கிறார் என்றால் மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார் என்பதையும் தாண்டி நிறைய அரசியல் அதில் இருக்கிறது என்றே புரிந்துகொள்ள வேண்டும். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று எடுத்துக் கொண்டாலும் கூட அந்த மரியாதையை விஜய்க்கு மட்டும் தருவது ஏன் என்று கேள்வி எழுகிறது. இப்படி கூட்டணி கட்சித் தலைவர்களான ஓபிஎஸ்- இபிஎஸ் போன்றவர்களை மரியாதை நிமித்தமாக கூட ஏன் அவர் சந்திக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. அப்படி எனில் இந்த சந்திப்புக்கு பின்னால் இருக்கிற அரசியலை நாம் உற்றுநோக்க வேண்டியிருக்கிறது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது என்.ஆர் காங்கிரஸ். அக்கட்சி 16 தொகுதிகளில் போட்டியிட்டு 10 தொகுதிகளிலும், பிஜேபி 9 இடங்களில் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியில் இருந்த அதிமுக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால் என்.ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டாக மெஜாரிட்டிக்கு தேவையான 16 தொகுதிகளை வென்றது இதனால் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஆனாலும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்கிறது. தனது கூட்டணியில் ஒரு பெரிய கட்சி தொடர்வதை எப்போதும் ரங்கசாமி விரும்பியது கிடையாது. அப்படி தொடர்ந்தால் அவர்களின் மேலாதிக்கத்தின் கீழ் தான் இருக்க வேண்டும் என அவர் கருதுவார். அதனால் தனக்குக் கீழ் அடங்கி இருக்கக்கூடிய சுயேட்சைகளை வைத்து அரசியல் நடத்த வேண்டும் என்பது தனக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என கருதக்கூடியவர்தான் ரங்கசாமி. எனவே பெரிய கட்சிகளை தேர்தலுக்குப் பிறகு கழட்டி விட ரங்கசாமியி தந்திரம் செய்வார். அதைதான் முன்பு ஜெயலலிதாவிடம் செய்தார். இப்போது பிஜேபி இடம் செய்ய முயல்கிறார்.
இந்நிலையில் தான் அவர் விஜய்யை சந்தித்துள்ளார். இப்போது பிஜேபிக்கு 6 எம்எல்ஏக்கள் உள்ளனர், அதேபோல் 6 பேர் சுயட்சை எம்எல்ஏக்களும் உள்ளனர். விரைவில் விஜய்யை கட்சி ஆரம்பிக்க செய்தால் அதில் அந்த ஆறு சுயேட்சைகளையும் இணையச் செய்து அவர்கள் ஆதரவுடன் பிஜேபியை கழட்டிவிட ரங்கசாமி திட்டமிட்டிருக்கலாம், அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. அதேநேரத்தில் பாஜகவிடம் 3 நியமன எம்எல்ஏக்களும் உள்ளனர். நியமன எம்எல்ஏ களையும் சேர்த்துதான் மெஜாரிட்டியை கணக்கு செய்ய வேண்டும், அப்படிப் பார்த்தால் சுயேச்சைகள் 6 பேரை சேர்த்தாலும் ரங்கசாமிக்கு மெஜாரிட்டி கிடைக்காது, அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் திமுகவசம் உள்ள 6 எம்எல்ஏக்களின் உதவியை நாடக்கூடும். சுருக்கமாக சொல்லப்போனால் பிஜேபியின் 6 எம்எல்ஏக்களை சுயேச்சை எம்எல் ஏக்கள் 6 பேர் மூலமும், பிஜேபியின் 3 நியமன எம்எல்ஏக்களை திமுகவின் 6 எம்எல்ஏக்கள் மூலமும் சமன்படுத்த திட்டமிடுகிறார் ரெங்கசாமி என சந்தேகம் எழுகிறது.
ஆனால் இது ரங்கசாமி நினைப்பது போல அவ்வளவு லேசான விஷயம் அல்ல, நியமன எம்எல்ஏ களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஒருவேளை நியமன எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்தால் மெஜாரிட்டிக்கு தேவையான எண்ணிக்கையும் அதிகரிக்கும். அப்போது ரங்கசாமி கையை சுட்டுக் கொள்ள வேண்டியிருக்கும். மேலும் இன்னொரு கேள்வியும் எழுகிறது, 6 சுயேட்சை எம்எல்ஏக்களை தன் கட்சியிலேயே ரங்கசாமி வைத்துக் கொள்ளலாமே, அதனால் கட்சி தாவல் தடைச் சட்டத்தில் எந்த தடையும் இருக்கப்போவதில்லையே, அப்படி இருக்கும்போது சுயேட்சைகளை ஏன் ரங்கசாமி விஜய் கட்சியில் இணைக்க முயற்சி செய்கிறார் என்ற கேள்வி எழக்கூடும். அதாவது சில சுயேட்சை எம்எல்ஏக்களுக்கு என்.ஆர் காங்கிரசில் நேரடியாக சேர்வதற்கு தயக்கம் இருக்கலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனால்தான் அவர் விஜய்யை சந்தித்திருக்கக்கூடும்.
மரியாதை நிமித்தம் பேச யாரும் ஒருமணிநேரம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள், பிஜேபி உஷாராக இருக்க வேண்டிய நேரமிது, அதேநேரத்தில் ரங்கசாமியும் உஷாராக இருக்க வேண்டும். காரணம் மத்தியில் மோடியும், அமித் ஷாவும் ஆட்சி செய்கிறார்கள் என்பதை ரங்கசாமி மறந்துவிடக்கூடாது. தந்திரத்தை தந்திரத்தால் முறியடிக்கும் தந்திரசாலிகள் அவர்கள் என்பதை ரங்கசாமி மறந்து விடக்கூடாது.