“எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது...” யாரால்? எதற்காக? ராமதாஸ் உருக்கம்
ஜெயலலிதா அரசால் நான் கைது செய்யப்பட்டேன். எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ள பதிவில், ஏப்ரல் முதல் நாள் முட்டாள்களின் நாள் என்றால், ஏப்ரல் கடைசி நாள் மனிதத்தன்மையற்ற பிசாசுகளின் நாள் ஆகும். அந்த நாளில் தான் அவர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களை பழிதீர்த்துக் கொள்வார்கள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் இத்தகையதொரு நாளில் தான், பாட்டாளி சொந்தங்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட மரக்காணம் வன்முறைகளுக்கு நீதி கேட்டு விழுப்புரத்தில் போராட்டம் நடத்தியதற்காக ஜெயலலிதா அரசால் நான் கைது செய்யப்பட்டேன். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் என்னுடன் கைதானார்கள்.
அதன்பின் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அறவழியில் போராடிய அன்புமணி உள்ளிட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொந்தங்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். 134 பேர் குண்டர் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக மாவீரன் குரு 5 முறை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அநீதிக்கு எதிராக போராடியதற்காக நாம் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. அவற்றை வரும் ஏப்ரல் 30&ஆம் தேதி முதல் எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறேன். காத்திருங்கள் சொந்தங்களே. என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.