Asianet News TamilAsianet News Tamil

திருமாவளவனே பேசத் தயங்கும் நச்சு வார்த்தைகளை இந்த சாக்கடையில பொறுக்குறவன் பேசலாமா? கொந்தளிக்கும் ராமதாஸ்

திருமாவளவனே பேசத் தயங்கும் நச்சு வார்த்தைகளை... இந்த  சாக்கடையில பொறுக்குறவன் பேசலாமா? இப்படி வன்னியர்களை இழிவுபடுத்தி பேசுவதா?மன்னிப்பு  கேட்கணும் என பேராயர் எஸ்ரா சற்குணத்தை கிழித்து தொங்கவிட்டிருக்கிறார்.
 

Ramadoss Statements against perayar sargunam
Author
Chennai Trade Centre, First Published Apr 27, 2019, 12:55 PM IST

திருமாவளவனே பேசத் தயங்கும் நச்சு வார்த்தைகளை... இந்த  சாக்கடையில பொறுக்குறவன் பேசலாமா? இப்படி வன்னியர்களை இழிவுபடுத்தி பேசுவதா?மன்னிப்பு  கேட்கணும் என பேராயர் எஸ்ரா சற்குணத்தை கிழித்து தொங்கவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்; சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் பேராயர் எஸ்ரா சற்குணம், வன்னிய சமுதாயத்தை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, கிழட்டு சிறுத்தையான தாம் சீற ஆரம்பித்தால் நாடு தாங்காது என்றும் வன்னியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எஸ்ரா சற்குணத்தின் வார்த்தைகள் அவர் வகிக்கும் பதவிக்கு ஒவ்வாதவை; கண்டிக்கத்தக்கவை.

அன்பையும், சகிப்புத் தன்மையையும் போதித்தவர் இயேசுபிரான். அவரது பிரதிநிதியாக தம்மை முன்னிறுத்திக் கொள்ளும் பேராயர் எஸ்ரா சற்குணம் இயேசுபிரானின் மொழிகளை பேசியிருக்க வேண்டும். ஆனால்,  அவரோ திருமாவளவனே பேசத் தயங்கும் நச்சு வார்த்தைகளை வாரி இறைத்திருக்கிறார். ‘‘ வன்னியர்களே நீங்களும் தாழ்த்தப்பட்டவர்கள் தான். நீங்கள் ஒன்றும் பிராமனர்கள் அல்ல. நீங்கள் ஒன்றும் உயர்குலத்தைச்  சார்ந்தவர்கள் அல்ல. நீங்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால், உங்களுக்கு நீங்களே சத்திரியர் என்ற பட்டத்தைப் போட்டுக் கொள்கிறீர்கள்.

நீங்கள் எந்த விதத்தில் சத்திரியர்களாக முடியும்? நானும் ஒரு விடுதலை சிறுத்தை என்பதைக் கூறிக்கொள்கிறேன். இந்தக் கிழட்டு சிறுத்தை சீற ஆரம்பித்தால் நாடு தாங்காது’’ என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுக்காக வன்னியர்கள் நடத்திய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில், ‘‘ வன்னியர்களாகிய நீங்கள் மரம்வெட்டிகளாக இருந்து, மரங்களையெல்லாம் வெட்டித் தள்ளி, பாறாங்கற்களையெல்லாம் உருட்டி வைத்து மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தினீர்கள்’’ என்றும் அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார்.

Ramadoss Statements against perayar sargunam

பேராயர் எஸ்ரா சற்குணம் மீது நான் மிகுந்த மரியாதை கொண்டிருந்தவன். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படும் சமத்துவ கிறித்துமஸ் விழாக்களில் அவரை அழைத்து சிறப்பு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவன். ஆனால், சிலரை என்னதான் தூய்மைப்படுத்தினாலும், புனிதப்படுத்தினாலும் அவர்கள் ஏதேனும் ஒரு தருணத்தில் தங்களின் இயல்பைக் காட்டி விடுவார்கள். பேராயர் எஸ்ரா சற்குணமும் அப்படித்தான் தாம் யார் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்வில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருந்த வன்னியர்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் கல்வி & வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; பிற சமுதாயங்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வன்னிய மக்களைத் திரட்டி 9 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டங்களை நடத்தினேன்.

அதன் ஒருகட்டமாக 1987-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருவார தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது, துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டு முன்னேறிய காவல்துறையின் அத்துமீறலைத் தடுப்பதற்காக போராளிகள் சில மரங்களை வெட்டியது உண்மை தான். அதுவும் ஒரு போராட்டம் வடிவம் தான். அதற்காக வன்னியர்களையும். இந்த ராமதாசையும்  குறைகூற வேறு விஷயங்களே கிடைக்காத போது ‘மரம்வெட்டி’ என்று பேராயர் எஸ்ரா சற்குணம் போன்ற சில கேவலமான ஜந்துக்கள் வசைபாடுவதை இனியும் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? இவ்வாறாக பேசுவதன் மூலம் தான் எஸ்ரா சற்குணம் அல்ல.... அற்ப சற்குணம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

பேராயர் எஸ்ரா சற்குணம் விடுதலை சிறுத்தையாக இருப்பதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. அதற்கான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உண்டு. அவர் கிழட்டு சிறுத்தையாக இருந்து கொண்டு சீறுவதிலும் எங்களுக்கு சிக்கல் இல்லை. ஆனால், சீற வேண்டிய இடத்தில் தான் சீற வேண்டும். அதை விடுத்து இளஞ்சிங்கக் கூட்டத்திடம் கிழட்டு சிறுத்தை சீறினால் சிங்கக்கூட்டம் மறக்க  முடியாத பாடத்தை புகட்டும் என்பதை பேராயர் எஸ்ரா சற்குணம் நினைவில் கொள்ள வேண்டும்.

இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியா என்பது பெருமை மிக்க அமைப்பு ஆகும். கரையான் புற்றில் கருநாகங்கள் குடியேறியதைப் போன்று ஜப்பானியர்களால் தொடங்கப்பட்டு, இந்தியாவில் இறைபக்தி கொண்டவர்களால் நடத்தப்பட்டு வந்த அந்த அமைப்பை எஸ்ரா சற்குணம் சதி செய்து கைப்பற்றினார். இயேசுவின் பெருமைகளை பரப்புவதற்கு பதிலாக அந்த இயக்கத்தையே திமுகவிடம் அடகு வைத்து,  அதற்கான விலையாக மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பதவி போன்ற சில்லறைகளை  வாங்கிக் கொள்பவர். ஒரு விழாவில் இயேசு கிறிஸ்துவை கலைஞரின் வடிவில் காண்கிறேன் என்று  எஸ்ரா சற்குணம் கூறினார். இயேசுவையும், கிறித்தவ மதத்தையும் இதைவிட மோசமாக கொச்சைப்படுத்த முடியுமா? என்பது தெரியவில்லை. இயேசு மீது சற்குணம் கொண்டுள்ள இறைபக்தி இவ்வளவு தான்.

கிறித்தவ மத போதகராக இருந்து கொண்டு எஸ்ரா சற்குணம் செய்த மோசடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. மத போதகர் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டு 2000-ஆவது ஆண்டில் குஜராத் மாநிலம் சிந்தியா கிராமத்தில் இந்து கோவிலுக்குள் புகுந்து சிலைகளை அகற்றி விட்டு கிறித்தவ தேவாலயமாக மாற்ற முயன்றவர் தான் இவர். அப்போது குஜராத் அரசு இவரை கைது செய்ய முயன்ற போது அங்கிருந்து  வந்து கலைஞரின் காலில் விழுந்து தப்பியவர் தான் இவர். சேலம் அருகே நரிக்குறவர்களை ஏமாற்றி  கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற விஷயத்தில் கடுமையான கண்டனத்திற்கு ஆளானவர் தான்  இவர். இவருடைய சிறுமைகள் பட்டியல் மிக நீண்டது. இவரது சிறுமைகளைப் பாராட்டி கருப்பு ஆடு, கள்ள தீர்க்கதரிசி என்றெல்லாம் நண்பர் வைகோ பட்டங்களை கொடுத்திருப்பதே  இதற்கு சான்று.

எஸ்ரா சற்குணம் பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர். இலங்கை அதிபர் ராஜபக்சேவிடமிருந்து  பெற்ற உபகாரங்களுக்காக ‘‘ஈழத்தமிழர்களை இலங்கை ராணுவம் கொலை செய்யவில்லை; விடுதலைப் புலிகள் தான் கொலை செய்தார்கள்’’ என்று வாய்கூசாமல் கூறியவர் தான் இந்த சிறிய மனிதர். எஸ்ரா சற்குணம் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். மாறாக, உண்மை நிலை அறியாமல் பாட்டாளி மக்கள்: கட்சியையோ, வன்னியர்களையோ இழிவுபடுத்தும்  செயல்களில் ஈடுபட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். வன்னியர்களை இழிவுபடுத்தி பேசியதற்காக அந்த மக்களிடம் எஸ்ரா சற்குணம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ்ரா சற்குணத்தைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

விடுதலை சிறுத்தைகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வன்னியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கொக்கரித்து இருக்கிறார். உழைக்கும் பாட்டாளிகளாகிய அவர்கள் அப்படி என்ன தவறை செய்து விட்டார்கள் என்பது தெரியவில்லை.

அப்போராட்டத்தில் பங்கேற்ற மற்ற தலைவர்களும் வன்னியர்களுக்கு எதிராக வன்மத்தை கொட்டியிருக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே சாதிக்கு அப்பாற்பட்டவர்களாகவும், சமூக நல்லிணத்தை விரும்புபவர்களாகவும் இருந்தால் பொன்பரப்பியில் ஊனமுற்ற அப்பாவி ஒருவரைத் தாக்கியும், வன்னிய சமுதாய பெண்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியும் கலவரத்தை தூண்டியவர்கள் யார்? என்பதை மனசாட்சியைத் தொட்டு சொல்ல வேண்டும். அதை விடுத்து வன்னிய மக்கள் மீது மட்டும் ஒருசார்பாக அவதூறு பரப்பிக் கொண்டிருந்தால் வன்னியர் எதிர்ப்பு என்ற சாக்கடையில் அரசியல் லாபம் என்ற அரிசி பொறுக்குபவர்களாகவே அவர்களை சமுதாயம் பார்க்கும்’’ என இவ்வாறு கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios