Asianet News TamilAsianet News Tamil

ஊழலும் முறைகேடும் மலிந்து கிடக்குது.. மீள முடியாத கடனில் மூழ்கும் அபாயம்!! ராமதாஸ் எச்சரிக்கை

ramadoss alarming tamilnadu government on transport revenue loss issue
ramadoss alarming tn government on transport revenue loss issue
Author
First Published Jun 3, 2018, 3:11 PM IST


போக்குவரத்துக் கழகங்கள் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு கடனில் மூழ்கி விடும் ஆபத்து உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாறு காணாத டீசல் விலை உயர்வு காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை ஈடுகட்ட அதிமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஊழலும், முறைகேடுகளும் மலிந்து கிடக்கும் நிலையில் அவற்றை சரி செய்ய வேண்டிய தமிழக அரசு, அதற்கு மாறாக போக்குவரத்துக் கட்டணங்களை 67% வரை உயர்த்தியது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் காலாவதியான, மழை பெய்தால் ஒழுகக் கூடிய பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், அவற்றுக்கு மிக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால், அன்றாடம் பயணிக்கக் கூடிய 30 லட்சத்துக்கும் கூடுதலான பயணிகள் வேறு போக்குவரத்து முறைகளுக்கு மாறினர். இதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு, கட்டண உயர்வுக்குப் பின்னர், ரூ.38 கோடி வரை கிடைக்க வேண்டிய தினசரி வருவாய் ரூ.28 கோடியாக குறைந்துவிட்டது. இதனால், பேருந்துக் கட்டண உயர்வின் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் மிகவும் குறைவாகவே அதிகரித்தது. அதேநேரத்தில் பேருந்துக் கட்டண உயர்வைக் காரணம் காட்டி, அதுவரை அளித்து வந்த டீசல் மானியத்தை அரசு நிறுத்திவிட்டதால், கட்டண உயர்வுக்குப் பிறகும் பெரும்பாலான அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில்தான் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போது, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.65.83 ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.72.97 ஆகும். கடந்த நான்கரை மாதங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.7.14 உயர்ந்துள்ளது. இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்குவதற்கான செலவு கிலோ மீட்டருக்கு 34 ரூபாயிலிருந்து 45 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் டீசலுக்கான செலவு மட்டும் கி.மீ.க்கு 9 ரூபாயிலிருந்து 13 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இயக்கச் செலவு தினமும் ரூ.6 கோடி அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களின் இழப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. இதை ஈடு செய்வதாகக் கூறி ஊரகப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் உட்பட ஆயிரக்கணக்கான பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அரசுப் பேருந்துகளின் இயக்க தூரம் தினமும் 15 லட்சம் கிலோ மீட்டர் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரகப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மற்றொரு புறம் போக்குவரத்துக் கழகங்களின் மோசமான நிதிநிலை காரணமாக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் வழங்கப்படவில்லை. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு, பல்வேறு கணக்குகளில் செலுத்தப்படாமல் நிலுவை வைக்கப்பட்டுள்ள தொகையின் அளவு ரூ.5,000 கோடியிலிருந்து ரூ.6,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதேநிலை நீடித்தால் போக்குவரத்துக் கழகங்கள் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு கடனில் மூழ்கி விடும் ஆபத்து உள்ளது. அதுமட்டுமின்றி, பிற அரசுத்துறை நிறுவனங்களுக்கு ஊதியம் உள்ளிட்ட உரிமைகள் சரியான நேரத்தில் வழங்கப்படும் நிலையில், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு மட்டும் நிலுவை வைக்கப்படுவது நியாயமல்ல. இது தொழிலாளர்களை மிகக் கடுமையாக பாதிக்கும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் எனப்படுபவை சேவை நோக்கத்துடன் நடத்தப்படுபவை ஆகும். தொலைதூரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் மூலம் வருவாய் கிடைக்காது என்பதாலும், பல்வேறு பிரிவினருக்கு இலவசப் பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாலும் போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பு ஏற்படும். இந்த இழப்பையும், டீசல் கட்டண உயர்வால் ஏற்படும் இழப்புகளையும் தமிழக அரசுதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இதைத் தடுப்பதற்காக டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய அரசு முன்வர வேண்டும். போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios