இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீதான தேசதுரோக வழக்கில் வரும் ஜூலை -5ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உயர்தீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீதான தேசதுரோக வழக்கில் வரும் ஜூலை -5ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உயர்தீதிமன்ற சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சென்னை ராணி சீதை மன்றத்தில் 2009ஆம் ஆண்டு புத்தக வெளியிட்டு விழா நடந்தது. இந்த விழாவில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ பங்கேற்றார். இந்த விழாவில் வைகோ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இந்நிலையில் 17ம் தேதி இந்த வழக்கு நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜரான வைகோ நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், ’நான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசினேன். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசே காரணம். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஒரு சர்வதேச போர் குற்றவாளி.

நான் இந்திய அரசு மீது வெறுப்புணர்வையோ, காழ்ப்புணர்வையோ ஏற்படுத்தும் விதமாக பேசவில்லை. இந்திய அரசு தனது கொள்கையை தான் மாற்றவேண்டும் என்று கூறினேன். அத்துடன் கடந்த 2002ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவையில் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன் இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன் என்று பேசியதை சுட்டிகாட்டி ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். 

அதற்கு என் மீது பொடா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டேன். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரித்து பேசுவது குற்றமாகாது என்று தீர்ப்பளித்தது எனக் கூறினார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் வரும் ஜூலை 5ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார். வைகோ ராஜ்யசபா மூலம் எம்.பி ஆக தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு வெளியாக உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.