6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் நான் ரெடி!! ரஜினிகாந்த் அதிரடி
6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினியும் கமலும் நேரடி அரசியல் களத்தில் இறங்குவது உறுதியாகியுள்ளது. கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்கி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டி, ஆன்மீக அரசியல் என அரசியல் களத்தில் ரஜினி பரபரப்பை கிளப்பினார்.
ரஜினிக்கு முன்னதாகவே அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாக கமல் அறிவித்துவிட்டார். கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத அரசியல் களத்தில் ரஜினியும் கமலும் இறங்கியுள்ளனர்.
ரஜினியும் கமலும் அரசியலில் குதிப்பது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இன்று போயஸ் கார்டன் வீட்டிலிருந்து புறப்பட்ட ரஜினிகாந்திடம், கமலுடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, கமல் தான் அதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். கூட்டணியை காலம்தான் தீர்மானிக்கும் என தெரிவித்தார்.
மேலும் 6 மாதத்தில் தேர்தல் வந்தால் சந்திக்க தயாரா என்ற கேள்விக்கு தயார் என ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தபோது, உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவிட்டதால், அதற்குள் கட்சி தொடங்கி போட்டியிட கால அவகாசம் கிடையாது. அதனால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை என தெரிவித்த ரஜினி, தற்போது 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என கூறியிருப்பது முரணாக உள்ளது. ஒருவேளை 6 மாதத்தில் தேர்தல் வர வாய்ப்பில்லை என்பதை அறிந்ததால் அவ்வாறு பதிலளித்திருப்பாரோ என்ற கேள்வியையும் எழுப்புகிறது.