ரஜினியை வைத்து சாதி அரசியலை தீர்த்துக் கொண்டேன்... பா.ரஞ்சித் பகீர் பேச்சு..!
ரஜினிசாரை வைத்து நான் சினிமாவுக்கு வந்ததற்கான அரசியலை பூர்த்தி செய்து கொண்டேன் என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது.
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்பட வெற்றி விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நான் உதவி இயக்குநராக இருந்தபோதே என்னை நான் அடையாளப்படுத்திக் கொண்டேன். நான் யார் என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்..? நான் எங்கிருந்து வருகிறேன் என்பதையும் தெளிவக சொல்ல வேண்டும். சினிமாவில் அடையாள மறுப்பு என்பது முக்கியமான அரசியல்.
நான் ஒரு பெயிண்டர். நமக்கான வாய்ப்பு நமது அடையாளத்தால் மறுக்கப்பட்டு விட்டால் சினிமாவை தூக்கிப்போட்டு விட்டு போய் படம் வரைந்து பிழைத்துக் கொள்ளலாம் என தீர்க்கமாக இருந்தேன். என்னுடைய படங்களை பிடித்தவர்களை விட நான் பேசுவதை பிடிக்காதவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.
ரஜினியை வைத்து படம் இயக்குவேன் என யோசித்ததே கிடையாது. எனது ஆசையும் அது கிடையாது. ஆனால் திடீரென அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதனை விட்டு விடக்கூடாது என்கிற பதற்றம் தான் இருந்தது. எப்படியாவது ரஜினியை வைத்து நான் சொல்ல வருகிற அரசியலை மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும் என்கிற பதற்றம் தான் எனக்கிருந்தது.
ரஜினிசாரை வைத்து நான் சினிமாவுக்கு வந்ததற்கான அரசியலை பூர்த்தி செய்து கொண்டேன். ரெண்டாவது படம் கிடைக்கும்போதும் ரஜினி சாரை வைத்து எனது பாணி அரசியலை கொண்டு போய் சேர்க்கணும் என முடிவு செய்தேன். அதற்கு அவரும் மிகப்பரிய உதவியாக இருந்தார். காசும் சம்பாதிக்கணும், படத்தின் மூலம் எனது அரசியலையும் கொண்டு போய் சேர்க்கணும். அதை பரியேறும் பெருமாள் எனக்கு கொடுத்தது. அந்தப்படம் கொடுத்த தைரியம் தான் குண்டு படத்தை நான் தயாரிக்க காரணம்’’என அவர் பேசினார்.