ரஜினிகாந்தின் அமெரிக்கா மர்மம்... மயோ க்ளினிக் ரகசியம் சொல்லும் நடிகை கஸ்தூரி..!
அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் மீண்டும் அமெரிக்கா திரும்ப அனுமதி இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் உள்ள மயோ கிளினிக்கில் இருந்து வெளியே வந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இன்னும் சில வாரங்கள் அமெரிக்காவிலே தங்கி ஓய்வெடுத்து விட்டு இந்தியா திரும்ப உள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில் அவரின் அமெரிக்கா பயணம் மர்மமாக உள்ளது என தனது ட்விட்டர் பதிவிட்டு பரபரப்புகளை கிளப்பியுள்ளார் நடிகை கஸ்தூரி.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "இந்தியாவிலிருந்து நேரடியாக வருபவர்களுக்கு அமெரிக்கா மே மாதமே தடை விதித்துவிட்டது. இதில் மருத்துவக் காரணங்களுக்கான பயணத்துக்காக எந்த விதிவிலக்கும் கிடையாது. பிறகு எப்படி, ஏன் ரஜினிகாந்த் இந்தக் காலகட்டத்தில் பயணம் மேற்கொண்டார்? திடீரென அவர் அரசியலிலிருந்து விலகியது, இப்போது இது என எதுவும் சரியாகப் படவில்லை. ரஜினி அவர்களே, தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்.
அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் மீண்டும் அமெரிக்கா திரும்ப அனுமதி இருக்கிறது. மற்ற நாடுகளிலிருந்து பயணப்படும் இந்தியர்களுக்குப் பயணப்பட அனுமதி இருக்கிறது. எனவே ரஜினியின் இந்தப் பயணம் கண்டிப்பாக மர்மமே.
ஒன்றிய அரசிடமிருந்து மருத்துவக் காரணங்களுக்காக ரஜினி விதிவிலக்குக் கோரி அனுமதி பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகின்றனர். இது இன்னும் கவலைக்குரியது. இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகள் சிகிச்சை தர முடியாத அளவுக்கு அப்படி என்ன அவருக்கு உடல் உபாதை? வழக்கமான பரிசோதனை என்றார்கள். மாயோ க்ளினிக் என்பது இருதய சிகிச்சைக்கானது.
இதைப் பற்றி நான் அதிகம் நினைக்க நினைக்க இது இன்னும் மோசமானதாகத் தோன்றுகிறது. ரசிகர்களே, ரஜினிகாந்துக்கு விதிமுறைகள் கிடையாது என்றெல்லாம் வந்து சொல்லாதீர்கள். சொல்வதற்கே மோசமான விஷயம் அது. இப்படிப்பட்ட புகழ்பெற்ற மனிதர்கள் மிக ஜாக்கிரதையாகச் சட்டத்தைப் பின்பற்றும் குடிமக்களாகவே இருக்க வேண்டியது முக்கியம்.
மற்ற அனைவரையும் பாதிக்கும் ஒரு பயணத் தடையை மீறி எப்படி ஒரு முக்கியஸ்தரும், அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் பயணப்பட்டுள்ளது என்பதைப் பற்றிக் கேட்பது சரியான, பொருத்தமான கேள்வியே. இதற்கு தர்க்கரீதியாக ஒரு விளக்கம் இருந்தால் நம் அனைவருக்கும் அது தெரியவரும். ரஜினிகாந்த உட்பட எவருமே விதிமுறைகளுக்கும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல" என பதிவிட்டுள்ளார்.